பொன்சேகா மீது தாக்குதல் நடத்தவோ இடையூறு ஏற்படுத்தவோ இல்லை
இராணுவப் பொலிஸார் முற்றாக மறுப்பு; மனைவியும்
சட்டத்தரணியும் நேற்று சந்தித்துப் பேச்சு
சரத் பொன்சேகாவை கைது செய்யச்சென்ற இராணுவப் பொலிஸார்
அவரை தாக்கவோ அல்லது அவருக்கு இடையூறு ஏற்படுத்தவோ இல்லையென்று இராணுவப்
பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவர்
மோசமாக நடத்தப்பட்டதாகவும் சில ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்திகளை
இராணுவப் பொலிஸ் பிரிவு முற்றாக மறுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த
விடயம் தொடர்பாக இராணுவப் பொலிஸ் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
சரத் பொன்சேகாவை கைது செய்யச் சென்ற அதிகாரிகள் அது பற்றி
அவருக்கு எடுத்துக் கூறினர். ஆனால், அவர் தொடர்ந்து அவர்களுடன் ஒத்துழைக்கப்
பிடிவாதமாக மறுத்ததால் அவருடைய மறுப்பையும் ஏனைய கருத்துக்களையும்
பொருட்படுத்தாது அவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டிய
நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதேவேளை கடற்படைத் தலைமைய கத்தில் சிரேஷ்ட
அதிகாரிகளுக்கான வதிவிடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொன்சேகாவை
நேற்று முன்தினம் அவரது மனைவி அனோமா பொன்சேகாவும், அவரால் பிரேரிக்கப்பட்ட
சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.
நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் பார்வையிடச் சென்ற
அவர்கள் சுமார் 3 மணித்தியாலங்கள் சந்திப்பு நடத்தினர். பொன்சேகா கேட்டுக்
கொண்டதற்கமைய மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்ப ட்டுள்ளது. இவ்வாறு
தடுத்துவைக்கப்படும் ஒருவருக்கு இராணுவத்தால் வழங்கப்படும் உணவை மாத்திரமே
சாப்பிட முடியும் என்று தெரிவித்த இராணுவப் பேச்சாளர், சரத் பொன்சேகாவின்
சுகாதார நலன்கள் மற்றும் முன்னாள் உயர் அதிகாரி என்ற விடயங்களை
கருத்திற்கொண்டு அவர் விரும்பும் உணவை செய்து கொடுக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
தற்போது இராணுவப் பாதுகாப்பிலுள்ள சரத் பொன்சேகாவுக்கு
எதிராக இராணுவச் சட்டத்தின் பிரிவு 57 (1) கீழ் சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் மேஜர் ஜெனரல் குறிப்பிட்டார்.
நன்றி தினகரன் |