தேசிய வீடமைப்புத்தின கொடி வாரத்தை முன்னிட்டு முதலாவது கொடி
ஜனாதிபதிக்கு அணிவிப்பு
[2016/06/23]
யூன் 23 ஆம் திகதி இடம்பெறும் தேசிய வீடமைப்புத் தினத்தை
முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கொடி வாரத்தை ஆரம்பித்துவைக்கும்
வகையில் முதலாவது கொடி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் அணிவிக்கும் நிகழ்வு இன்று (21)
முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச
அவர்களினால் ஜனாதிபதி அவர்களுக்கும் பிரதமருக்கும் கொடிகள் அணிவிக்கப்பட்டன.
காலம்சென்ற முன்னாள் ஜனாதிபதி, தேசிய வீடமைப்பு
அபிவிருத்தி அதிகாரசபையின் ஸ்தாபகர் ரணசிங்க பிரேமதாச அவர்களின் பிறந்த
தினத்தை குறிக்குமுகமாக யூன் மாதம் 23 ஆம் திகதி தேசிய வீடமைப்புத் தினமாகப்
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று முதல் ஒரு வாரகாலத்திற்கு
நடைமுறைப்படுத்தப்படவுள்ள தேசிய வீடமைப்பு வாரத்தில் புதிய வீடமைப்புக்
கருத்திட்டங்களை ஆரம்பித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிதிட்டங்கள்
முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சஜித்
பிரேமதாச, இக்கொடி விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானம் வீடுகள்
இல்லாதிருக்கும் வறிய மக்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்கும்
நிகழ்ச்சித்திட்டத்திற்கு பயன்படுத்தப்படுமெனக் குறிப்பிட்டார்.
மேலும் சீறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும்
வீடுகளற்ற குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக்கொடுக்கும் திட்டமும்
இவ்வருட தேசிய வீடமைப்புத்திட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒரு விசேட
நிகழ்ச்சித்திட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நன்றி ஜனாதிபதி செய்தி ஊடகம். |