இந்திய – இலங்கை இராணுவங்களின் ‘ மித்ரா சக்தி’ கூட்டுப் பயிற்சி
[2016/10/21]
மித்ரா
சக்தி’என அழைக்கப்படும் இந்திய – இலங்கை இராணுவங்களின் கூட்டுப் பயிற்சி
நான்காவது முறையாகவும் இலங்கை இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் படைப்பிரிவு
தலைமையகத்தில் எதிர்வரும் திங்கள் கிழமை (ஒக்.24) நடைபெறவுள்ளது. குறித்த
இக் கூட்டுப்பயிற்சி நாடுகடந்த பயங்கரவாதம், இணைந்து செயலாற்றும் திறன்கள்,
கூட்டு தந்திரோபாய நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் இரு தரப்பினரின்
அனுபவங்களை பகிர்ந்து கொள்ளல் போன்ற விடயங்களை விருத்தி செய்யும் வகையில்
இடம் பெறவுள்ளது.
இரு வார காலத்தைக் கொண்ட இக் கூட்டுப் பயிற்சியில்
இந்திய இராணுவத்தின் 6 அதிகாரிகள் உட்பட 45 படை வீரர்களும் இலங்கை
இராணுவத்தின் இலேசாயுத படைப்பிரிவின் படைவீரர்களும் இணைந்து
பங்குபற்றவுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இப் பயிற்சி இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல்
கிரிஷாந்த டி சில்வா மற்றும் இலங்கை இராணுவத்தின் அதிகாரிகள் ஆகியோரின்
மேற்பார்வையில் நடைபெறவுள்ளது. இதேவேளை, பயிற்சியின் நிறைவிற்கு முன்தினம்
(நவம்பர்.6) பிரிகேடியர் சுஜித் சிவாஜி படேல் உள்ளிட்ட இந்திய இராணுவத்தின்
அதிகாரிகள் இக் கூட்டுப் பயிற்சியின் கண்காணிப்பாளர்களாக கலந்து கொண்டு
பயிற்சியினை மதிப்பீடு செய்யவுள்ளனர்.
இதுவரை இக்கூட்டுப் பயிற்சி இந்தியாவில் இரு தடவைகளும்
இலங்கை கொமாண்டோவின் குடா ஓயாபயிற்சி கல்லூரியில் ஒரு தடவையும் நடை பெற்றமை
குறிப்பிடத்தக்கது.
|