பேண்தகு யுகத்திற்கான அரசாங்கத்தின் தொலைநோக்கு வெளியீடு… அனைவரும்
சகோதரத்துவத்துடனும் பண்பாட்டுடனும் நாட்டைக் கட்டியெழுப்புவதே இன்றைய தேவை
– ஜனாதிபதி
[2017/01/03]
இன்று நாட்டுக்குத் தேவைப்படுவது அதிகாரத்தில்
இருப்பவர்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அல்லது அதிகாரத்திற்கு
வர இருப்பவர்கள் அதிகாரத்தை நோக்காகக் கொண்டு செயற்படுவதன்றி அனைவரும்
சகோதரத்துவத்துடனும் ஒழுக்கப்பண்பாட்டுடனும் நாட்டைக் கட்டியெழுப்ப
ஒன்றிணைவதாகும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின்
எண்ணக்கருவிற்கேற்ப சுபீட்சமான தேசத்தை உருவாக்குவதற்காக பேண்தகு யுகத்தின்
தொலைநோக்கை வெளியிட்டுவைக்கும் தேசிய நிகழ்வு இன்று முற்பகல் ஜனாதிபதி
அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே
ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்த ஆண்டை நாட்டில் வறுமையை ஒழித்துக்கட்டும் ஆண்டாக
அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதுடன், வறுமையை ஒழித்துக்கட்டுவதற்கான
அரசாங்கத்தின் தொலைநோக்கிற்கேற்பவும் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை
வெற்றிகொள்வதற்காகவும் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள்
நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
2030 பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்வதற்கு
இலங்கையின் பயணம் தொடர்பாக இலங்கையில் தேசிய கொள்கையைத் தயாரிப்பதற்கும்
அதனோடு இணைந்ததாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. 2030 பேண்தகு அபிவிருத்தி
இலக்குகளில் 17 இலக்குகளுக்கான 17 துறைகளின் நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு
குழுவின் மூலம் தேசிய கொள்கை வடிவமைக்கப்படவுள்ளது.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி 2017 ஆம் ஆண்டு நாம்
ஒரு நாடு என்றவகையில பொருளாதார ரீதியாக பலமடையவேண்டிய வருடமாகும்
எனக்குறிப்பிட்டார். மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்கும் பொருளாதாரப்
பிரச்சினையில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் எடுக்க வேண்டிய
அனைத்து நடவடிக்கைகளையும் இந்த ஆண்டு எடுக்கவுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி,
நாட்டின் தேசிய கைத்தொழில் மற்றும் விவசாயத்துறையை முன்னேற்றி ஏற்றுமதி
வருமானத்தை அதிகரிப்பதற்கு பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள்
நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இயற்கை வளங்களைப் பாதுகாத்து பேண்தகு அபிவிருத்தி
இலக்குகளை வெற்றிகொள்வதற்காக நாம் பயணிக்க வேண்டும். மனிதர்களுக்கும்
பூமியின் உரிமையைப் பெற்றுள்ள அனைவருக்கும் அதன் உரிமை உறுதிப்படுத்தப்பட
வேண்டும் என்று அன்று மஹிந்த தேரர் குறிப்பிட்ட விடயம் அன்றுபோல் இன்றும்
என்றும் ஏற்புடையதாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பேண்தகு அபிவிருத்தி இலக்கை நோக்கிப் பயணிக்கின்றபோது
தேசிய நல்லிணக்கம் மிகவும் முக்கியமானதாகும் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி,
இனங்களுக்கிடையிலான ஐக்கியம், சகோதரத்துவம், நம்பிக்கையை உறுதிப்படுத்துவதன்
மூலமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
புத்தாண்டுப் பிறப்புடன் நாட்டின் எதிர்காலத்திற்காக ஒரு
முக்கியமான நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்துவைக்கக் கிடைத்தமையையிட்டு
மகிழ்ச்சி தெரிவித்த ஜனாதிபதி, அரசியல் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள்,
சமயத்தலைவர்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இணைந்து இந்த
நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட
வேண்டும் எனக்கூறினார்.
பேண்தகு யுகத்தின் தொலைநோக்கை ஜனாதிபதி இதன்போது வெளியிட்டுவைத்ததுடன்,
2030 பேண்தகு அபிவிருத்தித் தொலைநோக்கை ஆவணப்படுத்தும் விசேட குழுவின்
உறுப்பினர் பேராசிரியர் மொஹான் முனசிங்கவிடம் அதனைக் கையளித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய
உள்ளிட்ட அமைச்சர்கள், பிரதம நீதியரசர் ஸ்ரீபவன், வெளிநாட்டுத் தூதுவர்கள்
உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். |