சில அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறுவதுபோல அரசாங்கத்தை நடத்துவதற்கோ
அல்லது முப்படையினர் மீது குற்றப் பத்திரிகைகளை கொண்டு வருவதற்கோ நான்
தயாரில்லை – ஜனாதிபதி
[2017/03/02]
வெளிநாட்டுத் தொடர்புகளின் அடிப்படையில் செயற்படும் சில
அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறுவதுபோல அரசாங்கத்தை நடத்துவதற்கோ அல்லது
முப்படையினர் மீது குற்றப் பத்திரிகைகளை கொண்டு வந்து விசாரணை செய்வதற்கோ
தான் தயாராக இல்லை என்று ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.
இன்று (04) முற்பகல் பலாலி விமானப் படை முகாமில்
அவதானிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதன் பின்னர் முப்படையினரையும் பொலிஸ்
உத்தியோகத்தர்களையும் சந்தித்து உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால
சிறிசேன அவர்கள் இவ்வாறு வலியுறுத்தினார்.
வெளிநாட்டு நீதிபதிகளை அழைத்து எமது இராணுவ வீரர்களுக்கு
எதிராக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென கடந்த காலத்தில் ஐக்கிய நாடுகள்
சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்த ஆலோசனையை தான் முற்றாக
நிராகரித்ததாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், தாய் நாட்டின்
சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்த இராணுவத்தினரின் பாதுகாப்பு மற்றும்
கௌவரத்திற்காக தனது பதவிக்காலத்தில் பொறுப்புடன் செயற்படுவதாக தெரிவித்தார்.
நிதி நோக்கோடு செயற்படும் சில அரச சார்பற்ற நிறுவனங்களும்,
தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு முற்படும் எதிர்தரப்பு
அரசியல் சக்திகளும் எவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தபோதும் நாட்டின்
படையினரின் பிரதான பாதுகாவலன் தானே என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி அவர்கள்,
படையினரின் கௌவரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான எந்தவொரு
செயற்பாட்டிற்கும் தனது பதவிக் காலத்தில் இடமளிக்கப்பட மாட்டாது என்று
தெரிவித்தார்.
பாதுகாப்பு படையினருக்கு புதிய தொழில்நுட்ப அறிவு மற்றும்
பயிற்சி வாய்ப்புக்களையும், வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொடுத்து எமது
முப்படையினரை உலகில் தலைச்சிறந்த படையினராக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு
தனது பதவிக்காலத்தின்போது அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி
அவர்கள் தெரிவித்தார்.
இன்று முற்பகல் யாழ்ப்பாணம் பாதுகாப்பு படை
தலைமையகத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள், இராணுவத்தினரின்
சுகதுக்கங்களை விசாரித்து அவர்களுடன் சுமுகமாக கலந்துரையாடியதுடன்,
யாழ்ப்பாணத்தில் சேவை புரிந்து ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கு
பரிசில்களையும் வழங்கி வைத்தார்.
ஜனாதிபதி அவர்களின் வருகையை குறிக்குமுகமாக பாதுகாப்பு
படை தலைமையகத்தில் நாக மரக் கன்று நாட்டி வைக்கப்பட்டது.
அதன் பின்னர் பலாலி விமானப் படை முகாமிற்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள்,
அங்கும் இராணுவத்தினருடன் சுமுக கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், அவர்களது
பிரச்சினைகள் குறித்து விசாரித்தார்.
அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, துமிந்த திசாநாயக்க
உள்ளிட்டோரும் பாதுகாப்பு படைகளின் பிரதானி உள்ளிட்ட முப்படைகளின்
தளபதிகளும் பொலிஸ் மாஅதிபர் மற்றும் வட மாகாண கட்டளை தளபதி மகேஷ்
சேனாநாயக்க உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும்
இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
நன்றி: ஜனாதிபதி செய்தி ஊடகம் |