குருணாகல் பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் புதிய மாடிக்கட்டிடம்
ஜனாதிபதியினால் திறந்து வைப்பு
[2017/03/30]
குருணாகல் பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் புதிதாக
நிர்மாணிக்கப்பட்ட ‘விரு தரு விது பியச’ மூன்று மாடி கட்டிடத்தொகுதி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் இன்று (மார்ச், 29) வைபவ ரீதியாக
திறந்துவைக்கப்பட்டது. குறித்த இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின்
செயலாளர் திரு. ஏபிஜி கித்சிறி அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு வருகை தந்த ஜனாதிபதி
அவர்களை கல்லூரியின் அதிபர் வரவேற்று புதிய கட்டிடத்தொகுதியை திறந்து
வைக்கும் தளத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு ஜனாதிபதி புதிய
கட்டிடத்தொகுதியின் பெயர்பலகையை திரைநீக்கம் செய்து வைத்ததுடன்
அக்கட்டிடத்தொகுதியையும் சுற்றிப் பார்வையிட்டார். மேலும் கல்லூரியின்
கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பாடவிதான மற்றும் இணைப்பாட விதான
செயற்பாடுகளில் சிறந்த பெறுபேறுகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள்
மற்றும் புலமைப்பரிசில்கள் என்பனவற்றையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.
‘விரு தரு விது பியச’ மூன்று மாடி கட்டிடத்தொகுதியானது
வடமேல் மாகாண பொறியியலாளர் திணைக்களத்துடன் இணைந்து இலங்கை கடற்படையினரால்
சுமார் 250 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டது. இக்கட்டிட
தொகுதியில், 42 வகுப்பறைகள், 50 கணனிகளுடன்கூடிய இரண்டு தகவல் தொழிநுட்ப
ஆய்வுகூடங்கள், நூலகம், நிர்வாக அலுவலகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை என்பன
காணப்படுகின்றமை அதன் சிறப்பம்சமாகும். இக்கட்டிட தொகுதியை
நிர்மாணிப்பதற்கான நிதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சினால் வழங்கப்பட்டது.
குருணாகல் பாதுகாப்பு சேவைகள் கல்லூரியானது சுமார் 56
மாணவர்கள் மற்றும் இரு ஆசிரியர்களுடன் 2009ஆம் ஆண்டு ஜனவரி 29ம் திகதி
ஆரம்பிக்கப்பட்டது. இன்று இக்கல்லூரியில் முப்படை வீரர்கள், பொலிஸ்
அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகளின் சுமார் 1023 பிள்ளைகள் கல்வி
பயிலுகின்றனர். மேலும், இப்பாடசாலை மிகக் குறுகிய காலத்தில் கல்வி மற்றும்
விளையாட்டுத்துறைகளில் துரித வளர்ச்சி கண்டுள்ளது.
இந் நிகழ்வில் மகா சங்க நாயக்க தேரர்கள், ஏனைய
சமயத்தலைவர்கள், அமைச்சர்கள், வடமேல் மாகாண ஆளுநர், முப்படைகளின் தளபதிகள்,
பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிதிகள்,
பாசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ஆகியோர்
கலந்து கொண்டனர.
|