மீதொட்டமுல்லயில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிவாரண நடவடிக்கை
[2017/05/01]
அண்மையில் (ஏப்ரல் . 14) மீதொட்டமுல்ல குப்பை மேடு
சரிந்துவிழுந்து அனர்த்தம் ஏற்பட்டதை தொடர்ந்து மக்களை காப்பற்றி
அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையில் இலங்கை இராணுவத்தினர்
தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக இரானுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்பிரகாரம், இராணுவத்தின் உயிரியல், கதிரியக்கவியல்
மற்றும் அணுஆயுத பிரிவுகளுடன் இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி
கூட்டுத்தாபனம் ஆகியன ஒன்றிணைந்து தொழிநுட்பத்தில் தேர்ச்சி பெற்றவர்களின்
துணையுடன் தொடர்ந்தும் குப்பைமேடு உள்ள இடத்தினை சுற்றி அணைக்கட்டு
அமைப்பதுடன் இங்கு தேங்கிநிற்கும் கழிவு நீர் வழிந்தோடும் வகையில் ஹம் ரக
குழாய்கள் பொருத்தப்பட்டு வடிகால் முறைமை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும்,
குறித்த பகுதியில் மெதேன் வாயு பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.
இதேவேளை, இராணுவத்தினர் குறித்த பகுதியினை பாதுகாப்பு
கருதி பொலிதீன் உறையினால் உறையிட்டு மறைத்துள்ளதுடன் முதற்கட்டமாக சுமார்
150 குழாய்களை பொருத்தி இப்பகுதியில் தேங்கிக்கிடக்கும் கழிவு நீரை
வெளியேற்றும் நடவடிக்கையினையும் மேற்கொண்டுள்ளனர்.
மேலும், அண்மையில் (ஏப்ரல் .30) இடம்பெற்ற
கலந்துரையாடலின்போது தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
தொடர்பாக ஆராயப்பட்டது.
இதன்போது சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், வெளிநாட்டு
அதிகாரிகள், மத்திய பொறியியல் ஆலோசனை பணியக அதிகாரிகள், அனர்த்த
முகாமைத்துவ நிலைய அதிகாரிகள், இலங்கை காணி மீட்பு மற்றும் மேம்பாட்டுக்
கழகம் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
|