‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு’ இம்மாதம்
ஆரம்பம்...
[2017/08/17]
இலங்கை இராணுவத்தினால்
தொடர்ச்சியாக ஏழாவது ஆண்டாகவும் நடாத்தப்படவுள்ள ‘கொழும்பு பாதுகாப்பு
மாநாடு’ பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இம்மாதம் (ஆகஸ்ட்) 28
மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இவ்வருடம் “வன்முறை மிக்க
தீவிரவாதத்தை எதிர்கொள்ளுதல்: உலகளாவிய போக்குகள்” எனும் தொனிபொருளில்
குறித்த மாநாடு இடம்பெறவுள்ளது.
200 வெளிநாட்டு பிரதிநிதிகள்
உட்பட 800 பாதுகாப்புத் துறைசார் பிரதிநிதிகள் பங்குகொள்ளவுள்ள இந்த
சர்வதேச மாநட்டிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும்
இவ்வாண்டு முதற் தடவையாக சார்க் நாடுகளைச் சேர்ந்த சகல இராணுவத்
தளபதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு மேலதிகமாக சாம்பியா
நாட்டின் இராணுவத் தளபதி இந் நிகழ்வில் கலந்துகொள்வதற்கான வேண்டுகோள்
விடுத்துள்ளதுடன் தனது பங்குபற்றுதலை உறுதியளித்துள்ளதாகவும் இராணுவ
தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் 15 வெளிநாட்டு பேச்சாளர்களும் 12
உள்நாட்டு பேச்சாளர்களும் இம்முறை பாதுகாப்பு செயலமர்வில் உரையாற்றவுள்ளனர்.
இதேநேரம் பாதுகாப்பு
மாநாட்டின் முதலாம் நாள் அமர்வில் 'வன்முறை தீவிரவாதம்', 'வன்முறை
தீவிரவாதத்தை முறியடித்தல்', 'வன்முறை தீவிரவாதத்தை முறியடித்தலில்
படைவீரர்களின் வகிபாகம்’ மற்றும் ‘வன்முறை தீவிரவாத முறியடிப்பு பொறிமுறைகள்’
உள்ளிட்ட பல தலைப்புக்களில் உரைகள் இடம்பெறவுள்ளதுடன், இரண்டாம் நாள்
அமர்வில் குழுக்களாக பிரிந்து கலந்தாலோசனை நடத்தும் அமர்வுகளும்
இடம்பெறவுள்ளன.
இச் சர்வதேச பாதுகாப்பு
மாநாடு 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இம் மாநாட்டில் 60 நாடுகளில்
இருந்து 160 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றனர். மேலும்
இப் பாதுகாப்பு மாநாடு 2016ஆம் ஆண்டு முதல் கொழும்பு பாதுகாப்பு மாநாடு
எனும் பெயரால் அழைக்கப்படுகின்றது.
கடந்த வருடம் (2016)
“மென்வலு மற்றும் உலகளாவிய விடயங்களில் அதன் செல்வாக்கு” என்ற
தொனிப்பொருளில் இரண்டு நாட்கள் நடைபெற்ற கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் 71
நாடுகளைச் சேர்ந்த 125 வெளிநாட்டு பிரதிநிதிகள் அடங்கலாக 800 பாதுகாப்பு
துறைசார் நிபுணர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செயதிகள் >>
|