கிளிநொச்சி பிராந்திய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் 700ற்கு மேற்பட்ட
இராணுவத்தினர்
[2017/08/23]
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால்
இப்பிராந்தியத்தில் பாரியளவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஒன்று அண்மையில்
முன்னெடுக்கப்பட்டது. இலங்கை இராணுவ சிப்பாய்களின் பங்குபற்றுதலுடன்
இடம்பெற்ற இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள், அரசினால் செயற்படுத்தப்படும்
தேசிய டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டதாக
இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெங்கு நோய்த் தாக்கத்தை மட்டுப்படுத்தும் முகமாக
முன்னெடுக்கப்பட்ட இத் திட்டத்தில், கிளிநொச்சி , பூனேரி, முலங்காவில்
விஸ்வமடு மற்றும் கண்டவெளி போன்ற பிரதேசங்களின் 57 , 65 மற்றும் 66
படைப்பிரிவின் 700ற்கு மேற்பட்ட படை வீரர்கள் ஒத்துழைப்பை வழங்கிய அதேவேள,
சுகாதார திணைக்களங்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சுகாதாரப் பரிசோதகர்கள்
உள்ளிட்ட பலர் தமது பங்களிப்பை வழங்கினர்.
நாட்டின் பல பாகங்களில் வியாபித்துள்ள டெங்கு நோய்த்
தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு டெங்கு
ஒழிப்புத்திட்டங்களில் முப்படை வீரர்கள் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து
செயற்பட்டுவருகின்றனர். இதற்கு மேலதிகமாக சுகாதார திணைக்களங்களுக்கு
உதவியளிக்கும் வகையில் நீர்கொழும்பு மற்றும் கிரிபத்கொட ஆகிய பிரதேசங்களில்
இரத்த மாதிரிகளை பரிசோதிக்கும் நிலையங்களை ஸ்தாபித்து தமது பங்களிப்பினை
பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு வழங்கிவருகின்றனர். அத்துடன் நீர்
தேங்கியுள்ள இடங்களை சுத்தப்படுத்தி நீர் தேங்க இடமளிக்காத வகையில்
வழிந்தோடக் கூடிய வகையில் அவற்றை சீரமைத்தும் வருகின்றனர்.
இதேவேளை, , பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் (SFHQ-West)
கீழ் இராணுவ வீரர்கள் ஹோமாகம தொடர் கடைகளில் திடீரென ஏற்பட்ட தீயினை
வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட்,
21) இடம்பெற்ற இத்திடீர் தீ விபத்தினை தீயணைப்பு படை மற்றும் பொலிசாருடன்
இணைந்து இராணுவ வீரர்கள் மேலும் தீ பரவாமல் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|