இராணுவத்தின் பரா விளையாட்டு போட்டிகள் நவம்பரில்
[2017/10/06]
இலங்கை இராணுவத்தின் பரா விளையாட்டுப் போட்டிகள் அடுத்த
மாதம் 22ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை தியகம
விளையாட்டரங்கில் நடைபெற உள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கவீனமுற்ற போட்டியாளர்கள் குறித்த இவ் விளையாட்டுப் போட்டிகளில்
பங்குகொண்டு அவர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கட்டுவதற்கான ஒரு தளமாக
இது காணப்படுகிறது. அத்துடன், இவ்வருடம் முதற்தடவையாக வெளிநாட்டு விளையாட்டு
வீரர்களும் பங்குபற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, கடந்த மாத ஆரம்பத்தில் கூடைப்பந்து, பூப்பந்து,
சைக்கிள் ஓட்டுதல் சக்கர நாற்காலி, மரதன், வில்வித்தை, பாரம் தூக்குதல்,
கரப்பந்தாட்டம், கடற்கரை கரப்பந்தாட்டம், வலைப்பந்து, கிரிக்கெட், நீச்சல்,
சக்கர நாற்காலி மரதன், வலைப்பந்து, துப்பாக்கி சூடு மற்றும் பல்வேறு
விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப் பட்டதாகவும், மூன்று நாட்களைக்கொண்ட
(22, முதல் 24 வரை) இறுதிநிகழ்வின்போது 21 தடகள போட்டிகள் இடம்பெற
உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இவ்வருடத்திற்கான குறித்த விளையாட்டு போட்டியில்
800க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் பங்கு பற்றவுள்ளனர்.
1991 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட “இலங்கை இராணுவத்தின்
அங்கவீனனர்கள் விளையாட்டுப் போட்டி” ஆனது 2010 ஆம் ஆண்டு “இலங்கை
இராணுவத்தின் பரா விளையாட்டுப் போட்டிகள்” என பெயர் மாற்றப்பட்டமை
குறிப்பிடத்தக்கது. |