'மேம்படுத்தப்பட்ட கடல்சார்
பாதுகாப்புக்கான விரிவான பார்வை' எனும் தொனிப்பொருளில் கோல் டயலொக் - 2017
[2017/10/09]
சமுத்திர மற்றும் கடல்வழி
பாதுகாப்பு தொடர்பாக விரிவாக ஆராயும் “கோல் டயலொக்” எனும் சர்வதேச கடல்சார்
பாதுகாப்பு மாநாடு இன்று (ஒக்டோபர், 09) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில்
ஆரம்பமானது.
பாதுகாப்பு அமைச்சு மற்றும்
இலங்கை கடற்படை ஆகியவற்றின் ஏற்பாட்டில் எட்டாவது வருடமாக தொடர்ச்சியாக
நடைபெறுகின்ற இச் சர்வதேச மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் பிரதம அதிதியாகவும்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் கௌரவ
அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இலங்கை கடற் படைத் தளபதி
வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னைய்யாவின் தலைமையில் “'மேம்படுத்தப்பட்ட
கடல்சார் பாதுகாப்புக்கான விரிவான பார்வை'” என்ற தொனிப் பொருளில் இரண்டு
நாட்கள் நடைபெறவுள்ள இந்த சர்வதேச மாநாட்டில் அமெரிக்கா உட்பட 51 நாடுகள்
மற்றும் 12 சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து சிறப்பிக்கின்றனர்
அங்குரார்ப்பண நிகழ்வில்
கலந்து கொண்டு உரை நிகழ்த்திய பாதுகாப்பு அமைச்சர் விஜேவர்தன அவர்கள்,
கடல்சார் பங்காளர்கள், நட்பு நாடுகளுடன் மேம்பட்ட கடல் பாதுகாப்பு
ஒத்துழைப்புக்கென விரிவான கவனம் செலுத்த வேண்டும் எனவும் கடல் சார் ஆதிக்கம்
மற்றும் அதன் விவகாரங்களும் இன்று முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ள அதேவேளை
இதன் செல்வாக்கானது தற்போதும் மற்றும் எதிர்காலத்திலும் உறவுகளை பாரியளவில்
முன்னெடுத்துச் செல்ல ஏதுவாக அமையும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள்,
வெளிநாட்டு பிரதிநிதிகள், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, இராணுவத்
தளபதி, விமானப் படைத் தளபதி, பொலிஸ் மாஅதிபர் உட்பட முக்கியஸ்தர்கள் பலர்
கலந்து கொண்டனர்.
உள்நாட்டு மற்றும்
வெளிநாடுகளைச் சேர்ந்த கடற்படை மற்றும் கடல்சார் துறைசார்ந்த நிபுணர்கள்
கலந்து ஆலோசிக்கும் இம் மாநாடு 2010 ஆம் ஆண்டு முதற் தடவையாக இடம்பெற்றது.
சமுத்திரவியல் மற்றும் கடல்சார் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தல் உள்ளிட்ட
பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துறைசார்
நிபுணர்களால் விரிவாக ஆராயப்படும் இம்மாநாடு நாளை நிறைவுபெறவுள்ளமை
குறிப்பிடத்தக்கது
|