கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச
மாநாட்டு மண்டபத்தில் இலங்கை இராணுவத்தின் சமிக்ஞைப் படைப்பிரிவினால்
ஏற்பாடு செய்யப்பட “வேவ்” சர்வதேச கருத்தரங்கு மற்றும் தகவல் மற்றும்
தொடர்பாடல் தொழினுட்ப கண்காட்சியினை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன
அவர்கள் இன்று (நவம்பர், 28) காலை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.
இலங்கை இராணுவத்தின் சமிக்ஞைப்
படைப்பிரிவின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெறும் இச்சர்வதேச
கருத்தரங்கில் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்கள்
முக்கிய உரைநிகழ்த்தினார்.
இந்நிகழ்வுக்கு வருகை தந்த பிரதம அதிதியினை
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கா அவர்கள் வரவேற்றார்.
இக்கருத்தரங்கு, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப வல்லுனர்களுக்கு
அத்துறைசார்ந்த கட்டளை, கட்டுப்பாடு, தொடர்பாடல், கணினி, இணையவெளி மற்றும்
புலனாய்வு ஆகியவற்றில் துல்லியமான முறையில் கண்ணோட்டம் செலுத்தும் வகையில்,
செயல் விளக்கமளித்தல், அதனை பகிர்ந்து கொள்ளுதல், ஊடாக சவால்கள்
அச்சுறுத்தல்கள் தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு ஒரு நல்ல இணக்கமான
சூழலை ஏற்படுத்தும் நோக்குடன் இடம்பெறுகிறது.
இந்நிகழ்வில் தலைமை உரை நிகழ்த்திய
பாதுகாப்பு செயலாளர், நவீன தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்
நம்மை மேலும் இணைத்துள்ளன. இது முன்னொருபோதும் இல்லாத வகையில் பல
எதிர்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இணையவெளி பாதுகாப்பு, இன்றைய உலகில்
பாரிய குற்றங்கள் இடம்பெருவதினை தடுப்பதுடன் எதிர்காலத்தில் பொருளாதாரங்களை
முடக்கி, மனித உயிர்களை இழக்க வழிவகுக்கும் வகையில் இடம்பெறவுள்ள 'இணையவெளி
போர்களை' தடுப்பதில் ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது என தெரிவித்தார்.
அத்துடன் அவர், அதிகரித்து வரும் டிஜிட்டல்
இணைப்பானது, உற்பத்தி மற்றும் திறன் ஆகியவற்றை அதிகரிக்க வழிவகுக்கின்ற
அதேவேளை, பல உயர் மட்ட அச்சுறுத்தல்களுக்கு குறிப்பாக இணைய பாதுகாப்பு
அச்சுறுத்தல்களின் அதிகரிப்புக்கு வழிவகுக்கின்றது என இணைய பாதுகாப்பு
தொடர்பிலான அவசியத்தை கோடிட்டுக் காட்டிய அவர், அண்மைய தொழில்நுட்ப
முன்னேற்றங்களது உள்ளீர்ப்பின் அவசிய தன்மையையும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரை நிகழ்த்திய அவர், தகவல்
தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் சாகசங்கள் உலகத்தை மாற்றியமைக்கும்போது அவை
தேசங்களுக்கு புதிய சவால்களை உருவாக்குகின்றன எனவும் சைபர்ஸ்பேஸ் மற்றும்
சைபர் டொமைனைப் பயன்படுத்துவது, கடந்த சில ஆண்டுகளிலும் மற்றும் எதிர் வரும்
ஆண்டுகளிலும் தேசிய பாதுகாப்புக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இன்று,
இணைய அச்சுறுத்தல்களானது, தேசிய அரசுகள் மற்றும் ஆயுதப்படைகள் ஆகியவற்றின்
கவனத்தை ஈர்க்கக்கூடிய பாரிய விடயமாக அமையவுள்ளதை இந்த களத்தில் உள்ள எல்லா
நிபுணர்களும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், எந்த ஒரு நாட்டினதும் ஸ்திரத்தன்மை,
பொருளாதார வளர்ச்சி மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றைப் பாதுகாப்பதில் இணையவெளி
பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் எனவும் தெரிவித்தார்.
இணையவெளி பயங்கரவாதிகள் அவர்களின்
நோக்கங்களை அடைய பொதுமக்கள், இராணுவத்தினர் அல்லது தனியார் துறை என
பாகுபாடு காட்டுவதில்லை. மனித உயிர்களையும் சொத்துக்களையும் அழிக்க
நினைக்கிற வழக்கமான பயங்கரவாதிகளைப் போல இல்லாமல், இணையவழி பயங்கரவாதிகளின்
செயல்பாடுகள் அளவிடமுடியாத அளவிற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை
என அவர் தெரிவித்தார்.
மேலும், பாதுகாப்பு அமைப்புகளின் பாதுகாப்பை
உறுதிப்படுத்துவதற்காக புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும்
கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டிய அவசியத்தையும் அவர் இங்கு
வலியுறுத்தினார்.
இணைய அச்சுறுத்தல்கள், பெரும்பாலும்
அடிக்கடி மனித நடத்தைகளை குறிவைத்தே நிகழ்த்தப்படுகின்றன என்ற உண்மையை
கோடிட்டு காட்டிய அவர் சமூக வலைத்தளங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் சமூக
பொறியியல், ஸ்பியர் பிஷிங், இணையத்தினூடன மிரட்டல் போன்ற இணைய
அச்சுறுத்தல்கள் பெரும்பாலும் குறிப்பாக எதிர்கால தலைமுறை இளைஞர்களுக்கு
தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இணையவெளி பாதுகாப்பானது தேசிய சவாலாக
உருவெடுத்துள்ளது. எனவே பல நாடுகள் இந்த விடயத்திற்கு முன்னுரிமை
அளித்திருக்கின்றன. ஒரு முக்கிய விடயம் என்னவெனில் இந்த களத்தில் உள்ள
பெரும்பாலான வல்லுனர்கள் இணையவழி தாக்குதல்கள் தவிர்க்க முடியாத ஒன்று என்று
நம்புகிறார்கள். எந்தவிதமான நிகழ்வுகளுக்கும் நாம் தயாராக இல்லை என்றால்,
அவ்வகையான நிகழ்வுகள் இணையவழி குற்றம் அல்லது இணையவழி தாக்குதல் என்பதை நாம்
அறிந்து கொள்ள முடியாமல் போய்விடும் என தெரிவித்தார்.
அணுசக்தி நாடுகள் அணு ஆயுதங்களைப்
பயன்படுத்துவதைப் போலன்றி, இணையவழி தாக்குதல், இன்று பல்வேறு வகையான
சக்திகளால் ஒரு நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் கையாளப்படலாம். தாக்குதல்
நிகழ்த்திய குறித்த இடத்தினை மீண்டும் கண்டுபிடிப்பது என்பது மிகவும்
கடினமான அல்லது கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒன்று எனவும் அவர் மேலும்
தெரிவித்தார்.
தனது முக்கிய உரையை நிறைவு செய்த செயலாளர்
அவர்களுக்கு சமிக்ஞை படைப்பிரிவின் கேணல் கொமடான் மேஜர் ஜெனரல் அஜித்
விஜேசிங்க அவர்களால் நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது
இந்நிகழ்வின்போது, ஜனாதிபதி அவர்களுக்கு
இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கா அவர்கள் நினைவுச்சின்னம்
ஒன்றை வழங்கி கௌரவித்தார்.
கருத்தரங்கின் அங்குரார்பன அமர்வின் பின்னர்
இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் இணைந்து தகவல் மற்றும்
தொடர்பாடல் தொழினுட்ப கண்காட்சியினை திறந்துவைத்தனர். இங்கு அரச மற்றும்
தனியார் துறை நிறுவனங்களின் நவீன தொழில்நுட்ப தயாரிப்புகள்
காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இக் கண்காட்சி பொது மக்கள் பார்வைக்காக இரண்டு
நாட்கள் (28 மற்றும் 29 .) திறந்திருக்கும
இந்நிகழ்வில், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு
அமைச்சசின் செயலாளர், கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள், அமைச்சின்
சிரேஷ்ட அதிகாரிகள், பொலிஸ்மா அதிபர், இராஜதந்திரிகள், சிரேஷ்ட வெளிநாட்டு
இராணுவ பிரதிநிதிகள், தொழில் வல்லுனர்கள், புத்திஜீவிகள் மற்றும் விஷேட
அழைப்பினை ஏற்று வருகைதந்தோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.