பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும்
பதவிநிலை கல்லூரியின் பட்டமளிப்பு நிகழ்வில் ஜனாதிபதி கலந்து சிறப்பிப்பு
[2018/12/13]
களனி சபுகஸ்கந்த பாதுகாப்பு
சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் 12ஆவது பட்டமளிப்பு நிகழ்வில்
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று (டிசம்பர், 12) கலந்து
சிறப்பித்துள்ளார்.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை
மற்றும் பதவிநிலை கல்லூரியின் 12ஆவது பட்டமளிப்பு நிகழ்வில் இலங்கை
இராணுவத்தைச் சேர்ந்த 68 அதிகாரிகளும் கடற்படையைச் சேர்ந்த 27 அதிகாரிகளும்
விமானப்படைச் சேர்ந்த 27 அதிகாரிகளும் பங்களாதேஷைச் சேர்ந்த மூன்று
அதிகாரிகளும் நேபாளம், பாகிஸ்தான், இந்தியா, பிஜி, இந்தோனேசியா, ருவாண்டா,
மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு அதிகாரியும் தமது கற்கை
நெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்து தமது பீசீஎஸ் (psc) பட்டத்தினை
பெற்றுக்கொண்டனர். இப்பட்டமளிப்பு களனி பல்கலைக்கழகம் மற்றும் பாதுகாப்பு
சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரி ஆகியன இணைந்து வழங்கியுள்ளன.
இந்நிகழ்வில்,
பயிற்சியின்போது தமது திறன்களை வெளிக்காட்டிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதியினால்
விருதுகள் வழங்கிவைக்கப்பட்டன. அதனடிப்படையில் சிறந்த ஆய்வுக் கட்டுரைக்காக
கோல்டன் பென் விருது இலங்கை இராணுவ மேஜர் PVTM பெரேரா அவர்களுக்கு
வழங்கிவைக்கப்பட்டது. மிகச்சிறந்த செயல்திறனுக்கான கோல்டன் ஆவ்ல் விருது
இராணுவ பிரிவின் மேஜர் CD பாலிகவதன, கடற்படை பிரிவின் லெப்டினன்ட் கொமாண்டர்
(G) BARI உபயசேகர, விமானப்படை பிரிவின் ஸ்க்ட்ரான் லீடர் WGBG வனசிங்க
ஆகியோருக்கு வழங்கிவைக்கப்பட்டதுடன், வெளிநாட்டு மாணவருக்கான மிகச்சிறந்த
செயல்திறனுக்கான விருது இந்திய இராணுவ பிரிவின் மேஜர் விஜேந்திர பிரசாத்
சிங் அவர்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டது.
இங்கு விஜயம்
மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அவர்கள் புதிய பல்நோக்கு வசதிகளைக்கொண்ட நான்கு
மாடி கட்டிடம் ஒன்றினையும் திறந்து வைத்தார். “அடோப் ஒப் விஸ்டம்” என
பெயரிடப்பட்ட இக்கட்டிடத்தொகுதி ஒரு வாசிகசாலை, இரண்டு பரீட்சை மண்டபம்,
மற்றும் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்காக ஒரு உணவகமும்
உள்ளடங்கியதாக காணப்படுகிறது.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு
அதிகாரிகளின் பிரதானி, முப்படைத் தளபதிகள், வெளிநாட்டு அதிதிகள், முன்னாள்
தளபதிகள், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின்
அதிகாரிகள் உள்ளிட்ட அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
|