ஐ.நா. சுற்றாடல் மாநாட்டில் விசேட
அதிதியாக கலந்துகொள்ள ஜனாதிபதி கென்யா பயணம்
[2019/03/13]
கென்யாவின் நைரோபி நகரில்
இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் மாநாட்டில் விசேட அதிதியாக கலந்து
கொள்வதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (13) முற்பகல்
கென்யாவிற்கு பயணமானார்.
கென்ய ஜனாதிபதி உஹூரு
கென்யாட்டாவின் விசேட அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி அவர்கள் இந்த சுற்றாடல்
மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.
“சுற்றாடல் சவால்களும்
நிலையான நுகர்வு மற்றும் உற்பத்திக்கான புத்தாக்கத் தீர்வுகளும்” எனும்
தொனிப்பொருளில் மார்ச் 11ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா. சுற்றாடல் மாநாட்டின்
நான்காவது அமர்வு மார்ச் 15ஆம் திகதி வரை நைரோபி நகரில் நடைபெறவுள்ளது.
அதன் உயர்மட்ட பிரதான
கூட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளதோடு, நாளை நண்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால
சிறிசேன அவர்கள் மாநாட்டில் தனது விசேட உரையை நிகழ்த்தவுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி
இம்மானுவேல் மெக்ரோன் உள்ளிட்ட இராஜதந்திரிகள் பலர் இந்த மாநாட்டில்
கலந்துகொள்ளவுள்ளனர்.
நிலையான உணவுக் கட்டமைப்பு,
உணவு பாதுகாப்பு, உயிர் பல்வகைமை அழிவடைதலை தடுத்தல், வறுமை மற்றும் இயற்கை
வளங்களின் முகாமைத்துவத்துடன் தொடர்பான சுற்றாடல் சவால்கள், வளங்களின்
வினைத்திறனான பயன்பாடு, சக்தி வளங்கள், இரசாயன பதார்த்தங்கள், கழிவு
முகாமைத்துவத்திற்கான வாழ்க்கை நடைமுறைகள் மற்றும் துரித தொழிநுட்ப
மாற்றங்களுக்கு உள்ளாகும் பருவத்தில் புத்தாக்கப் பேண்தகு வர்த்தக
அபிவிருத்தி தொடர்பில் இம்முறை மாநாட்டின்போது கவனம் செலுத்தப்படும்.
கென்யாவிற்கான தனது நான்கு
நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின்போது ஜனாதிபதி அவர்கள், கென்ய ஜனாதிபதி உஹூரு
கென்யாட்டாவையும் சந்திக்கவுள்ளார்.
1970ஆம் ஆண்டில்
உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைக்கும்
கென்யாவிற்குமிடையில் நட்பு ரீதியான தொடர்புகளே இதுவரை காணப்படுகின்றன.
பொதுநலவாய அமைப்பு மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளின் அமைப்பு (IORA)
ஆகியவற்றில் இவ்விரு நாடுகளும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கென்யா இலங்கையின் விசேட
வர்த்தக பங்காளராக காணப்படாவிடினும் பரஸ்பர அனுகூலங்களை
பெற்றுக்கொள்வதற்காக இதுவரை காணப்படாத பொருளாதார தொடர்புகள் தொடர்பில் இரு
நாடுகளும் தற்போது ஆர்வம் செலுத்தி வருகின்றன.
ஆடை உற்பத்தி, நீர் மின்
உற்பத்தி, தோட்டக்கலை மற்றும் மோட்டார் வாகன பயிற்சி துறைகளில் தற்போது
இலங்கையர்கள் கென்யாவில் பணியாற்றி வருகின்றனர்.
நன்றி: pmdnews.lk |