”சத்விரு அபிமன்” மூலம் போர்
வீரர்கள் கௌரவிப்பு
[2019/07/22]
போர் வீரர்களது
குடும்பங்களுக்கு புதிய வீடுகள், காணி மற்றும் கல்வி உதவித்தொகைகள் ஆகியன
ஜனாதிபதி அவர்களினால் வழங்கிவைப்பு
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
அவர்கள் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற 'சத்விரு அபிமன்'
எனும் போர் வீரர்களுக்கு நலன்புரி நன்மைகளை வழங்கி கௌரவிக்கிகும் நிகழ்வில்
இன்று (ஜூலை, 22) பிற்பகல் கலந்து சிறப்பித்தார்.
இத்தேசிய நிகழ்வில், போர்
வீரர்களுக்கான பல்வேறு நலன்புரி திட்டத்தின்கீழ் சுமார் 1500 க்கும்
அதிகமான பயனாளிகளுக்கு புதிய வீடுகள், வீட்டு மானியங்கள், காணி மற்றும்
கல்வி உதவித்தொகைகள் ஆகியன வழங்கிவைக்கப்பட்டன.
கொழும்பு சுகததாச உள்ளக
விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்களை
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ
ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் வரவேற்றார்.
இந்நிகழ்வில் வரவேற்புரை
நிகழ்த்திய பாதுகாப்பு செயலாளர் அவர்கள், போர் வீரர்களை எப்போதும் நினைவில்
கொள்வதுடன், அவர்களின் சேவைகளையும் தியாகங்களையும் நன்றியுடன் நினைவுகூற
வேண்டும் என தெரிவித்தார். நாட்டில் நெருக்கடியான சூழ்நிலை காணப்படும்போது
மாத்திரமல்லாமல், பொலிஸார் மற்றும் முப்படையினரின் அயராத முயற்சிகளை
என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
போர் வீரர்களின் தியாகங்களை நினைவுகூரும் இவ்வகை செயற்பாடுகளை ஒரு தேசம்
என்ற வகையில் கடைபிடிக்க வேண்டியதுடன், அவர்களை நினைவில் நிலைநிறுத்துவதும்,
நல்ல மனதுடன் நன்றியை வெளிக்காட்டுவதும் ஒவ்வொரு குடிமகனின் கடமையுமாகும்
எனவும் தெரிவித்தார். இன்னலன்புரி திட்டம் தொடர்பாக தெரிவிக்கையில், இன்று
இடம்பெறும் இந்நிகழ்வின் ஊடாக சுமார் 700 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான
பெறுமதிக்க வீடமைப்பு திட்டம், காணி மற்றும் கல்வி உதவித்தொகை என்பனவற்றை
போர் வீரர்களது குடும்பங்கள் பெற்று நன்மையடைவார்கள் எனவும் அவர்
தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி
அவர்கள், போர்வீரர்களின் சேவைகளுக்கு நன்றியைத் தெரிவித்ததோடு, நாட்டைப்
பாதுகாப்பதில் அவர்கள் செய்த பெரும் சேவைகளையும் தியாகங்களையும் நினைவு
கூர்ந்தார். மேலும், அது எப்போதும் மதிக்கப்பட்டு, பாராட்டப்பட வேண்டும்
எனவும் அவர் இங்கு தெரிவித்தார்.
யுத்தம்
முடிவடைந்ததிலிருந்து முப்படையினர் தேசிய அபிவிருத்தி, விவசாய திட்டங்கள்,
கட்டுமானத் துறை, அனர்த்த நிவாரணம் மற்றும் ஏனைய நலன்புரி திட்டங்களிலும்
ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்களின் மனித வளங்கள், திறன்கள் மற்றும்
நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளையும்
தயாரித்துள்ளனர். மேலும், ஜனாதிபதியவர்கள் சிறுநீரக நோய் பரவுவதை தடுக்கும்
வகையில் தூய குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிர்மாணித்து வழங்குவதில்
முப்படையினரின் பாங்கினையும் இங்கு அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வின்போது ஜானதிபதி
அவர்கள் 25 புதிய வீடுகளை உயிரிழந்த போர் வீரர்கள் மற்றும் அங்கவீமுற்ற
குடும்பங்களுக்கு வழங்கி வைத்தார். 'சத்விரு அபிமன்' நிகழ்ச்சி
திட்டத்தின்கீழ், புதிய வீடுகளை முழுமையாக மற்றும் பகுதியளவில்
நிர்மாணிப்பதற்கான அல்லது பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை
பூரணப்படுத்தும் வகையில் உதவித்தொகைகள் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
இவ்வீடுகள் “நமக்காக நாம்”
நிதியிலிருந்து சுமார் 37.5 மில்லியன் ரூபாய் பெறுமதியில்
நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இந்த செலவுகளில் பாதுகாப்பு படையினரால்
மேற்கொள்ளப்பட்ட தொழிலாளர் மற்றும் பிற செலவுகள் ஊள்ளடக்கப்படவில்லை
என்பதுடன், இத்திட்டத்தினை நிறைவு செய்ய சுமார் 50 மில்லியனுக்கும் அதிகமான
ரூபாய் செலவாகும்.
மேலும், 925 போர்வீரர்கள்
பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்கான உதவித்தொகையும், 246
போர்வீரர்கள் தமது வீடமைப்பு தேவைகளுக்காக அரசு காணிகளையும்
பெற்றுக்கொண்டதுடன், “விரு சிசு பிரதீபா” திட்டத்தின் கீழ் போர்வீரர்களின்
குடும்பங்களைச் சேர்ந்த 308 குழந்தைகள் கல்வி உதவித்தொகையினையும்
பெற்றுக்கொண்டனர்.
இதற்கேற்ப, 2010 முதல்
இன்றுவரை சுமார் 2917 புதிய வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 4487 பகுதியளவு
நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் 2014 முதல் நிறைவடைந்துள்ளன. இந்த திட்டத்தின்
கீழ் நிர்மாணித்து முடிக்கப்பட்ட மொத்த வீடுகள் 7404 ஆகும்.
இந்நிகழ்வில், ஜனாதிபதியின்
செயலாளர், பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு அதிகாரிகளின் பிராதானி,
பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், முப்படை தளபதிகள், பதிற் கடமை
பொலிஸ்மா அதிபர், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதம பணிப்பாளர்,
முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், விஷேட அதிதிகள் உள்ளிட்ட பெரும்
எண்ணிக்கையிலான முப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள்
பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
|