பௌத்த மதத்தின் ஆறுதல், மனித நேயம் என்பவற்றைக் கொண்டு வாழ்க்கையை
பக்குவப்படுத்திக்கொள்ள உறுதிகொள்வோம் – பொசன் தினச் செய்தியில் ஜனாதிபதி
[2016/06/19]
பௌத்த மதத்தின் உன்னத ஆறுதல் மற்றும் மனித நேயம்
என்பவற்றைக் கொண்டு எமது வாழ்க்கையினை பக்குவப்படுத்திக்கொள்ள இந்த பொசன்
தின நன்நாளில் உறுதிகொள்வோம் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள்
தெரிவித்துள்ளார்.
வரலாறுதொட்டே காலத்திற்குக் காலம் மேலெழுந்த எந்தவித
ஆக்கிரமிப்பிற்கோ அல்லது ஆதிக்கத்துக்கோ எமது இந்த கலாசார ஆன்மீகத்தை
அழிக்க இயலாதுபோயின என்பதை இவ் உன்னத பொசன் தினத்தில் நினைவு கூரவேண்டும்
என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
பொசன் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள
செய்தியிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள
செய்தி
மிஹிந்து தேரர் இலங்கைக்கு வருகைதந்து பௌத்த மதத்தையும்
பௌத்த சாசனத்தையும் ஸ்தாபித்து பௌத்த கலாசாரத்தினதும் பௌத்த நாகரிகத்தினதும்
அபூர்வபண்புகளின் மூலம் சிங்கள கலாசாரத்தையும் சிங்கள பண்பாட்டையும்
மெருகூட்டிய வரலாற்று நினைவுகளை அனுஷ்டிக்கும் பொசன் பௌர்ணமிதினம் இன்றாகும்.
இரண்டாயிரத்தி முன்னூற்றி இருபத்தி மூன்று (2323) ஆண்டுகள் பூர்த்தியாகும்
இவ் வரலாற்று நிகழ்வு, சிங்கள கலாசாரத்தின் மறுபிறப்பென அறிஞர்களால்
போற்றப்படுகின்றது. அன்று அநுராதபுரத்தை மையமாகக்கொண்டு வியாபித்த பௌத்த
மதம் மற்றும் பௌத்த சிந்தனைமூலம் நாம் பெற்றுக்கொண்ட ஆன்மீக மறுமலர்ச்சியும்
கலாசாரமேம்பாடும் ஒப்பற்ற ஒன்றாகும்.
மிஹிந்து தேரரின் வருகையினாலேயே அஹிம்சை, ஆறுதல்,
மனிதநேயம், சமத்துவம் மற்றும் எளிமையான வாழ்க்கைமுறை, சுதந்திர சிந்தனை
ஆகியன எமது வழமான கலாசாரத்தின் முக்கிய அம்சங்களாகின.
இக் கலாசார மறுமலர்ச்சியினாலேயே சிங்கள மொழி, இலக்கியம்
மற்றும் கலை ஆகியன முன் ஒருபோதும் இல்லாதவாறு விசித்திரமாகவும்
உணர்வுபூர்வமாகவும் பிரகாசித்தன. அநுராதபுரத்தில் வீற்றிருக்கும் சமாதி சிலை,
சந்திரவட்டக்கல், அவுகண புத்தர் சிலை ஆகியன இக் கலாசார கொடையினை உலகறியச்
செய்யும் சான்றாகும்.
வரலாறுதொட்டே காலத்திற்குக் காலம் மேலெழுந்த எந்தவித
ஆக்கிரமிப்பிற்கோ அல்லது ஆதிக்கத்துக்கோ எமது இந்த கலாசார ஆன்மீகத்தை
அழிக்க இயலாதுபோயின என்பதை இவ் உன்னத பொசன் தினத்தில் நினைவு கூரவேண்டும்.
தூய்மையான இந்த பௌத்த மதத்தினதும் கலாசாரத்தினதும்
அரவணைப்பில் வளர்ந்த எமக்கு, எமது குறைகளை கண்டறிந்து நாளைய உலகினை கருணைக்
கண்ணுடன் நோக்குவதற்கு எந்தவிதத் தடையும் இல்லை. பௌத்த மதத்தின் உன்னத
ஆறுதல் மற்றும் மனித நேயம் என்பவற்றைக் கொண்டு எமது வாழ்க்கையினை
பக்குவப்படுத்திக்கொள்ள இந் நன்நாளில் உறுதிகொள்வோம்.
உங்கள் அனைவருக்கும் பௌத்தமதத்தின் சாந்தியும் அளவற்ற
பலமும் மும்மணிகளின் நல்லாசியும் உரித்தாக வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்!
நன்றி ஜனாதிபதி செய்தி ஊடகம். |