இலங்கையின் 69வது தேசிய சுதந்திர தின வைபவம்
[2017/02/04]
இலங்கையின் 69வது தேசிய சுதந்திர தின பிரதான வைபவம்
முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அவர்களின்
தலைமையில் கொழும்பு காலி முகத்திடலில் இன்றுக் காலை (2017 பெப்ரவரி 4ஆம்
திகதி சனிக்கிழமை மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க,
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன, பாதுகாப்புச் செயலாளர்
பொறியியலாளர் கருனாசேன ஹெட்டியாராச்சி உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து
சிறப்பித்தனர்.
ஜனாதிபதியின் வருகையைத் தொடர்ந்து பாதுகாப்பு படைகளின்
பிரதம அதிகாரி, முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஜனாதிபதியை
பிரதான கொடிக்கம்பத்திற்கு அழைத்து செல்ல மங்கள முழக்கம், வாத்தியத்திற்கு
மத்தியில் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின பிரதான வைபவத்தை ஜனாதிபதி
உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இதன் போது சுமார் 10 பாடசாலைகளைச்
சேர்ந்த 110 மாணவிகளினால் தேசிய கீதம் பாடப்பட்டதுடன், ஜனாதிபதி விஷேட
மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் ஜயமங்கள காத்தா மற்றும் தேவ வஸ்து
பாடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இலங்கையின் சுதந்திரம் இறைமை, தேசிய
ஒருமைப்பாடு என்பவற்றை நிலைநாட்டும் பொருட்டு தாய் நாட்டிற்காக உயிர் நீத்த
சகல தேசாபிமானிகளையும் நினைவு கூர்ந்து இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி
செலுத்தப்பட்டதுடன் ஜனாதிபதிக்கு முப்படைகளினால் மரியாதை அணிவகுப்பு
வழங்கப்படுவதுடன், மரியாதை நிமிர்த்தம் 21 பீரங்கி வேட்டுக்களும்
காலிமுகத்திடல் கடற்பரப்பை நோக்கி தீர்க்கப்பட்டது.
அதன் பின்னர் பிரதான மேடையிலிருந்து ஜனாதிபதி நாட்டு
மக்களுக்கு தனது சுதந்திர தின உரையை நிகழ்த்தினார். இங்கு ஜனாதிபதி
குறிப்பிடுகையல் அபிவிருத்தியின் செயற்பாட்டில் இன நல்லிணக்கம் மற்றும் மத
சகவாழ்வினை அடைவது அதன் பிரதான தேவைப்பாடகவுள்ளதாகவும். இவற்றுக்கு
அரசாங்கத்தினால் ஏற்கனவே முன்னுரிமைகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவித்தார். மேலும், எமது தேசம் வலுவான கல்விமான்கள், திறமையான மற்றும்
அறிவார்ந்த மக்களுடன் தேசத்தை கட்டியெழுப்பும் அறிவு மற்றும் வளங்களைக்
கொண்டு காணப்படுகின்றதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் உரையைத் தொடர்ந்து முப்படைகள், பொலிஸ்,
சிவில் பாதுகாப்பு படை மற்றும் மாணவர் படையணியினரின் மரியாதை அணிவகுப்பு
இடம்பெற்றது. இந்த மரியாதை அணிவகுப்பில் சுமார் எட்டாயிரம் படைவீரர்கள்
கலந்து கொண்டனர். இவர்களில் இராணுவத்தைச் சேர்ந்த 183 அதிகாரிகளும் 3973
வீரர்களும், கடற்படையைச் சேர்ந்த 32 அதிகாரிகளும் 878 வீரர்களும், விமானப்
படையைச் சேர்ந்த 70 அதிகாரிகளும் 1055 வீரர்களும் 18 பொலிஸ் அதிகாரிகளும்
470 பொலிஸாரும், பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் 37 அதிகாரிகளும் 496
வீரர்களும், சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 24 அதிகாரிகளும் 684
வீரர்களும் 100 தேசிய மாணவ படையினரும் அடங்குவர்.
'தேசிய ஒற்றுமை' என்ற தொனிப் பொருளில் இம்முறை நடைபெற்ற
சுதந்திர தின பிரதான நிகழ்வில் மதத் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, பீல்ட்
மார்ஷல் சரத் பொன்சேகா, பிரதம நிதியரசர் கே. ஸ்ரீபவன், மாகாண ஆளுநர்கள்,
முதலமைச்சர்கள், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், இராஜாங்க
அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள்,
முதலமைச்சர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு தூதவர்கள், இராஜதந்திரிகள் உட்பட
முக்கியஸ்தர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
|