வடக்கில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் குடும்பங்களுக்கு
புதிய வீடுகள்
[2017/03/13]
யாழ், கீரிமலை பகுதியில் “நல்லிணக்கபுரம்”
வீட்டுத்திட்டத்தில் மேலும் 33 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்
கையளிக்கப்பட்டன. குறித்த நிகழ்வு அண்மையில் (மார்ச் .10) “நல்லிணக்கபுரம்”
சமூக சேவை நிலையத்தில் இடம்பெற்றது.
இதன்போது உள்நாட்டினுள் இடம்பெயர்ந்து நலன்புரி
நிலையங்களில் வாழும் 33 பயனாளிகளுக்கு புதிய வீடுகளுக்கான
உறுதிப்பத்திரங்கள் கையளிக்கப்பட்டதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வீட்டுத்திட்ட நிர்மாணப்பணிகள் கூட்டு
செயற்திட்ட முகாமை குழு, முப்படை வீரர்கள் மற்றும் பயனாளிகளின் சமூக
உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் கூட்டு முயற்சியினால் முன்னெடுக்கப்பட்டதாகும்.
இங்கு நிர்மாணிக்கப்பட்ட ஒவ்வொரு வீடும் 20 பேச்சஸ்
நிலப்பரப்பில் சுமார் ஒரு மில்லியன் ரூபா பெறுமதி கொண்டதாக காணப்படுவதுடன்
இரண்டு படுக்கையறைகள், நீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அனைத்து விதமான
அடிப்படை வசதிகளையும் கொண்டுள்ளது. அத்துடன் பொதுவசதிகளான வீதிகள்,
விளையாட்டு மைதானம், முன்பள்ளி, சமூக சேவை நிலையம், தூய குடி நீர்
விநியோகிப்பதற்கான சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல பொது வசதிகளையும்
கொண்டமைந்துள்ளன
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட செயலாளர், யாழ் பாதுகாப்பு படை
கட்டளைத்தளபதி, அரச உயர் அதிகாரிகள், மற்றும் பயனாளிகளின் குடும்ப
உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நல்லிணக்க செயற்திட்டத்தின் கீழ் புதிய வீடுகளை
வழங்கிவைக்கும் நோக்கில் கீரிமலையில் முன்னெடுக்கப்பட்டுவரும்
வீட்டுத்திட்டமானது உள்நாட்டினுள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில்
வாழும் குடும்பகளுக்கு வீடுகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன அவர்களால் கடந்த வருடம் (2016). ஒக்டோபர் 31ம் திகதி
வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தகதாகும். மேலும்
“மாவன்கல்லடி” பகுதியில் சுமார் 225 வீடுகளை எதிர்வரும் தினங்களில்
நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
|