இந்து சமுத்திர வலய நாடுகள் ஒத்துழைப்புடன்
செயற்பட வேண்டும்…… ஜனாதிபதி
[2017/09/04]
இந்து சமுத்திர வலய
நாடுகளின் பிரதான பொருளாதார வளமாகக் காணப்படும் சமுத்திரத்தின் பாதுகாப்பினை
உறுதி செய்வதற்கு முன்னுரிமையளித்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவம்
குறித்து ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் வலியுறுத்தினார்.
கொழும்பில் இடம்பெறவுள்ள
2வது இந்து சமுத்திர வலய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ள அதன்
உபதலைவியான இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று (01)
முற்பகல் ஜனாதிபதி அவர்களை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்த
வேளையிலேயே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்து சமுத்திர வலயத்தில்
அமைந்துள்ள நாடுகளின் பொருளாதார மற்றும் மின்சக்தி தேவைகளைப் பூர்த்தி
செய்துகொள்வதற்கான முக்கிய போக்குவரத்து ஊடகமாக இந்து சமுத்திரம்
விளங்குவதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அதனூடாக நாட்டு மக்களுக்கு
நேரடித் தாக்கங்கள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இந்து சமுத்திர வலய
நாடுகளிலும், வலயத்திலும் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை
ஏற்படுத்துவதில் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு நேரடியாக தொடர்புபடுகிறது
என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இந்தியாவுக்கும்
இலங்கைக்குமிடையில் தொன்றுதொட்டு காணப்படும் வலுவான உறவுகளை மேலும்
பலப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும்
நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்த இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இரு
நாடுகளின் மக்களின் நன்மைக்காகவும், முன்மொழியப்பட்டுள்ள புதிய இருதரப்பு
பொருளாதார திட்டங்களைத் துரிதப்படுத்துவதற்கு இந்தியா அர்ப்பணிப்புடன்
செயற்படும் என்றும் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கிடையே
காணப்படும் விரிவான சுமுக உறவுகள் மற்றும் அந்நியோன்ய அரசியல் நிலைமைகள்
காரணமாக எந்தவொரு பிரச்சினையையும் சுமுகமாக தீர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பு
காணப்பவதாக இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் குறிப்பிட்டார்.
அண்மையிலுள்ள நட்பு நாடு
என்றவகையில் இந்தியா இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு ஜனாதிபதி
அவர்கள் இதன்போது இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்கு நன்றி
தெரிவித்தார்.
இதனிடையே 2வது இந்து
சமுத்திர வலய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ள தென்கொரிய பிரதி
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் Cho Byungjae இன்று முற்பகல் ஜனாதிபதி அவர்களை
அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.
அண்மைக்காலமாக இலங்கையில்
மேற்கொள்ளப்படும் தென்கொரிய முதலீடுகளை அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள
நடவடிக்கைகளுக்கு தென்கொரிய பிரதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்கு நன்றி
தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், தென் கொரியா தற்போது எதிர்நோக்க நேர்ந்துள்ள
சவால்களுக்கு மத்தியிலும் பொறுமையுடன் செயற்படுகின்றமை குறித்து பாராட்டு
தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கிடையே
காணப்படும் பொருளாதார உடன்படிக்கைகளை மேலும் மேம்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை வெற்றிகரமாக செயற்படுத்துவது தொடர்பாகவும் இதன்போது
கலந்துரையாடப்பட்டது. |