ஜனாதிபதி நியூயோர்க் நகரைச் சென்றடைந்தார்
[2017/09/18]
ஐக்கிய நாடுகள் சபையின்
72ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க சென்ற
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இலங்கை நேரப்படி இன்று காலை
நியூயோர்க் ஜோன் எப் கென்னடி சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.
நியூயோர்க் நகரில் ஜனாதிபதி
தங்கியிருக்கும் ஹோட்டலில் அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளினால்
ஜனாதிபதி அவர்களுக்கும் ஜயந்தி சிறிசேன அவர்களுக்கும் பெருவரவேற்பு
வழங்கப்பட்டது.
‘மக்களை மையப்படுத்தி
நிலையானதொரு உலகில் அனைவருக்கும் சமாதானம் மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்காக
உண்மையாக உழைத்தல்’ என்ற கருப்பொருளின் கீழ் ஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது
பொதுச்சபைக் கூட்டத்தொடர் நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின்
தலைமையகத்தில் நடைபெறுகிறது.
இதன் பிரதான கூட்டத்தொடர்
செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அன்றைய தினம்
பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பொதுச்சபைக்
கூட்டத்தொடரில் விசேட உரையாற்றவுள்ளார்.
ஜனாதிபதியாகத் தெரிவு
செய்யப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஐக்கிய
நாடுகள் சபையின் பொதுச் சபைக்கூட்டத்தொடரில் கலந்துகொள்ளும் மூன்றாவது
சந்தர்ப்பம் இதுவாகும்.
இலங்கையின் அரசியல்
இணக்கப்பாடு, நல்லிணக்கம் மற்றும் சமாதானம் குறித்தும் 2017 ஆம் ஆண்டை வறுமை
ஒழிப்பு ஆண்டாகப் பிரகடனப்படுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள
நிகழ்ச்சித்திட்டங்கள், பசுமை அபிவிருத்திக்கான நிகழ்ச்சித்திட்டங்கள்
குறித்தும் ஜனாதிபதி தனது உரையில் உலகத் தலைவர்களுக்கு விளக்கவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின்
பொதுச் சபைக்கூட்டத்தொடரில் பங்கு கொள்ளும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன்
ஜனாதிபதி இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 72
ஆவது பொதுச்சபைக்கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் நாளை காலை நடைபெறவுள்ள
ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார, சமூக பேரவையின் அரசியல் சீர்திருத்தம்
தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலிலும் ஜனாதிபதி பங்குபற்றவுள்ளார்.
செப்டெம்பர் மாதம் 23 ஆம்
திகதி வரை இடம்பெறவுள்ள தனது அமெரிக்க விஜயத்தில் அந்த நாட்டில் வாழும்
இலங்கையர்களுடனான சந்திப்பு உட்பட மேலும் பல நிகழ்ச்சிகளிலும் ஜனாதிபதி
கலந்துகொள்ளவுள்ளார்.
நன்றி: ஜனாதிபதி
செய்தி ஊடகம் |