பாக்கிஸ்தான் - இலங்கை இராணுவத்தின் 'அதிகாரிகள் பேச்சுவார்த்தை'
நிகழ்வு
[2017/09/26]
இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளது இராணுவ
அதிகாரிகளிடையேயான பேச்சுவார்த்தை நிகழ்வு அண்மையில் (செப்டம்பர், 23)
இடம்பெற்றது. குறித்த பேச்சுவார்த்தை நிகழ்வு பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை
இராணுவத்தின் சமிஞ்சை படைப்பிரிவு நிலையத்தில் இடம்பெற்றதாக இராணுவ தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ள பாகிஸ்தானிய பிரதிநிதிகள்
குழுவில் பாகிஸ்தான் இராணுவ பொது தலைமையக கட்டளை, கட்டுப்பாடு, தொடர்பாடல்,
கணினி மற்றும் புலனாய்வு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஹபீஸ்
உர் ரஹ்மான் அவர்களின் தலைமையிலான ஆறு பேர்கள் பாகிஸ்தான் இராணுவத்தைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் அதேவேளை இலங்கைப் பிரதிநிதிகள் குழுவில் பிரதம
சமிஞ்சை படைப்பிரிவு அதிகாரி மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க மற்றும்
ஆராய்ச்சி, பகுப்பாய்வு, கணிப்பு மற்றும் அபிவிருத்தி கிளை ஆகியவற்றின்
பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரேணு ரோவேல் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள்
பங்கெடுக்கின்றனர்.
இப் பேச்சுவார்த்தை நிகழ்வில் தொழில் ரீதியான
புரிந்துணர்வு மற்றும் பரஸ்பர நலன்களை இருதரப்பினரும் பகிர்ந்து
கொள்வதற்கான வழிமுறைகளைத் தேடுதல் மற்றும் நிபுணத்துவ அறிவு, புதிய தகவல்
தொழிநுட்ப நுணுக்கங்கள் மற்றும் பாதுகாப்பு மீதான அவைகளின் தாக்கம்
என்பனவற்றின் உதவியுடன் இலங்கை இராணுவ பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னேற்ற
மேற்கொள்ளப்படும் நடடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
2012ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இரு நாடுகளினது இராணுவ
அதிகாரிகளிடையேயான பேச்சுவார்த்தையின் முக்கிய குறிக்கோள், இருதரப்பு
முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் நேரடி மற்றும் வெளிப்படையான
கருத்துப்பரிமாற்றத்தின் ஊடாக இராணுவப் படைகளின் புரிந்துணர்வை அதிகரித்து
தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை மேம்படுத்தி இரு நாடுகளினது
இராணுவத்தினரிடையே தொழில்சார் நிபுணத்துவத்தை ஊக்குவித்தல் என்பது
குறிப்பிடத்தக்கது.
|