11வது உலக இராணுவ கோல்ப் சாம்பியன்ஷிப்- 2017 சீனக்குடாவில் ஆரம்பம்
[2017/11/14]
இலங்கை விமானப்படையின்
ஏற்பாட்டில் இடம்பெறும் 11வது உலக இராணுவ கோல்ப் சாம்பியன்ஷிப்- 2017
போட்டிநிகழ்வுகள் திருகோணமலை சீனக்குடாவிலுள்ள விமானப்படை ஈகிள்ஸ் கோல்ப்
லிங்ஸ் மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் (நவம்பர்) 12 ஆம் திகதி
முதல் 19 ஆம் திகதி வரை நடைபெற உள்ள குறித்த போட்டிநிகழ்வுகள் முதன்
முறையாக இலங்கையில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இப்போட்டி ஆரம்ப நிகழ்வில்
பாதுகாப்பு படைகளின் பிரதாணி எட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, சர்வதேச
இராணுவ விளையாட்டு கழக உத்தியோகபூர்வ பிரதிநிதியாக அதன் பொதுச்செயலாளர்
கேர்ணல் தோரா மாம்பி கொய்தா அவர்கள், இராணுவ தளபதி, லெப்டினென்ட் ஜெனரல்
மகேஷ் சேனநாயக்க மற்றும் இலங்கை விமானப் படை பிரதாணி எயார் வைஸ் மார்ஷல்
சுமங்கல டயஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதேவேளை, இப்போட்டியின்
சாம்பியன்ஷிப் கிண்ணத்திற்காக இலங்கை உட்பட அமெரிக்கா, நெதர்லாந்து, பஹ்ரைன்,
கனடா, எஸ்டோனியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், ஸிம்பாபே ஆகிய நாடுகளைச்
சேர்ந்த 84 விளையாட்டு வீரர்கள் போட்டியிடுவதுடன், இலங்கைக் குழுவை
பிரதிநிதித்துவபடுத்தி 06 விளையாட்டு வீரர்கள் மற்றும் 03 வீராங்கனைகள்
போட்டியிடுகின்றனர். மேலும், சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தினை
பிரதிநித்துவப்படுத்தி 27 அதிகாரிகள் இங்கு நடுவராக பணிபுரிகின்றமை
குறிப்பிடத்தக்கதாகும்.
|