நெஸ்பியின் நிலையான ஆதரவுக்கு ஜனாதிபதி
நன்றி தெரிவிப்பு
[2018/04/19]
பிரித்தானிய பழமைவாதக்
கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரித்தானிய பிரபுக்கள் சபையின்
உறுப்பினருமான பரோன் நெஸ்பி (Baron Naseby) நேற்று (18) லண்டன் நகரில்
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.
இலங்கை அரசாங்கத்தினால்
தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்திட்டங்களை பாராட்டிய பரோன்
நெஸ்பி இலங்கையின் உண்மையான ஆதரவாளர் என்ற வகையில் அதற்கான
ஒத்துழைப்புக்களையும் பெற்றுத்தருவதாக குறிப்பிட்டார்.
அத்துடன் இலங்கையில்
மேற்கொள்ளப்பட்டுவரும் ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க செயற்திட்டங்களையும்
பாராட்டிய பரோன் நெஸ்பி, யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில்
முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பணிகள் உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில்
சிறந்த மட்டத்தில் காணப்படுவதாக தெரிவித்தார்.
இத்தகைய செயற்பாடுகள்
பற்றிய சரியான, போதிய தகவல்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஜெனிவாவுக்கும்
உரியவாறு கிடைக்கப்பெறாமை வருந்தத்தக்கதாகும் என தெரிவித்த பரோன் நெஸ்பி,
அந்த உண்மை நிலை தொடர்பாக அவர்களை தெளிவுபடுத்த தாம் தமது பூரண உதவியை
வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கையின் உண்மையான நிலைமை
தொடர்பாக போதிய புரிந்துணர்வுடன் நாட்டின் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க
செயற்பாடுகளுக்காக பரோன் நெஸ்பி வழங்கும் தனிப்பட்ட உதவிகளுக்கும் இதன்போது
ஜனாதிபதி அவர்கள் நன்றி தெரிவித்தார்.
பிரித்தானிய
பாராளுமன்றத்தில் இலங்கையை ஆதரித்த பரோன் நெஸ்பி, இலங்கையில் யுத்தத்தின்
பிற்பகுதியில் இடம்பெற்ற உயிரிழப்புக்கள் மிகைப்படுத்தப்பட்டவையாகும் என்று
குறிப்பிட்டுள்ளார்.
நன்றி_ஜனாதிபதி செய்தி
ஊடகம் |