போதைப்பொருள் ஒழிப்பு சட்டங்களை ஒருபோதும்
வலுவிழக்கச் செய்யக்கூடாது என்று ஜனாதிபதி தெரிவிப்பு
[2018/12/12]
போதைப்பொருள் கடத்தல்
காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் போதைப்பொருள் கடத்தல்
நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்ட கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும்
என அண்மையில் மேற்கொண்ட தீர்மானத்தை நாட்டினதும் அடுத்த தலைமுறையினதும்
எதிர்காலத்திற்காக உடனடியாக நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க
வேண்டும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
மரண தண்டனை வழங்கப்பட வேண்டிய நபர்கள் பற்றிய அறிக்கைகளை சமர்ப்பித்தல்
தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உரிய முறையில் செயற்படாத காரணத்தினால்
அத்தீர்மானத்தை நிறைவேற்றுவது தாமதமாகியுள்ளதுடன், அது பற்றிய விசாரணையொன்றை
மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தலை ஒழித்தல் மற்றும் குற்றங்களை குறைத்தல் தொடர்பான சட்ட
திருத்தங்கள் பற்றி இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற
கலந்துரையாடலொன்றின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டங்களை ஒருபோதும்
வலுவிழக்க இடமளிக்கக்கூடாது என்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தப்பிச்
செல்வதற்கு முடியாத வகையில் அந்த சட்டங்களை பலப்படுத்த வேண்டியதன்
முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், மதுவரித்
திணைக்களம் உள்ளிட்ட அனைத்து நிறுவனமும் இதன்போது ஒத்துழைப்புடன் நாட்டு
மக்களின் நன்மைக்காக தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும்
சுட்டிக் காட்டினார்.
போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் குற்றங்களை குறைப்பதுடன் தொடர்புடைய சட்ட
வரைவுகள், மது வரி கட்டளைச் சட்டத்தின் 46 மற்றும் 47 ஆவது உறுப்புரைகள்
திருத்தம், நச்சு போதைப் பொருள் கட்டளைச் சட்ட திருத்தம், சிறைச்சாலைகள்
பாதுகாப்பிற்கு விசேட அதிரடிப் படையின் உதவியை பெற்றுக்கொள்ளல், வெலிக்கடை
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை பூசா சிறைச்சாலைக்கு
மாற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
சட்ட விரோத போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது பொலிஸ் அதிகாரிகள்
எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை தீர்ப்பது குறித்தும் இதன்போது விசேட கவனம்
செலுத்தப்பட்டதுடன், இது சம்பந்தமாக கடந்த நவம்பர் 27ஆம் திகதி
மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை
நடைமுறைப்படுத்துவதிலுள்ள முன்னேற்ற நிலைமைகள் பற்றியும் இக்கலந்துரையாடலில்
கவனம் செலுத்தப்பட்டது.
சட்ட விரோத போதைப்பொருள் சுற்றிவளைப்புடன் தொடர்புடைய முன்னேற்ற நிலைமைகள்
குறித்து ஜனாதிபதி அவர்கள் கேட்டறிந்ததுடன், போதைப்பொருள்
சுற்றிவளைப்புகளில் சம்பந்தப்படும் அதிகாரிகளை வலுவூட்டுவதற்கான விசேட
நிகழ்ச்சித் திட்டமொன்றை அமைச்சரவையின் மூலம் நடைமுறைப்படுத்த
எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதுவரை இடம்பெற்ற சுற்றிவளைப்புகளின் போது உயிர்நீத்த அதிகாரிகளின் தகவல்களை
உள்ளடக்கிய அறிக்கையொன்றை பெற்றுத்தருமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி அவர்கள்,
அந்த அதிகாரிகளின் குடும்பங்களின் நலன்பேணலுக்கான நிகழ்ச்சித் திட்டமொன்றை
தயாரிக்குமாறும் தெரிவித்தார்.
மேலும் மதுபான விற்பனைக்காக அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ள நிலையில்
அவற்றை காட்சிப்படுத்தாது இருத்தல் மற்றும் அவற்றை சமர்ப்பிக்காது இருப்பதை
குற்றமாக கருதி சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சட்ட திருத்தத்தை
மேற்கொள்வது பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. வீதிப் பாதுகாப்பு,
வீதி விபத்துக்களை தடுத்தல், பாதசாரிகளின் பாதுகாப்பு, முச்சக்கர வண்டி
மற்றும் மோட்டார் சைக்கிள்களின் நியமங்கள், சாரதிப் பாடசாலைகளின் நியமங்கள்
உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தும் இக்கலந்துரையாடலின் போது விசேட கவனம்
செலுத்தப்பட்டது.
சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன,
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, பொலிஸ்மா அதிபர் பூஜித
ஜயசுந்தர, மதுவரி ஆணையாளர் நாயகம் உட்பட அமைச்சின் செயலாளர்கள் மற்றும்
அரசாங்க அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
நன்றி:pmdnews.lk |