ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்தோனேசிய ஜனாதிபதியுடன் சந்திப்பு
[2016/05/27]
G7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜப்பான் சென்றிருக்கும்
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இந்தோனேசிய குடியரசின் ஜனாதிபதி
ஜோகோ விடோடோ அவர்களை ஜப்பான் ஹில்டன் நகோயா ஹோட்டலில் நேற்று (26)
சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது இலங்கையில் இந்தோனேசிய முதலீடுகளை
மேம்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர். தற்போது
இலங்கையில் நிலவும் ஸ்திரமான நிலைமை உள்ளூர் உற்பத்திகள் மற்றும் சர்வதேச
சந்தைக்கான இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருள்களில் இருந்து
உற்பத்திசெய்யப்படும் உற்பத்திகளுக்கான முதலீட்டாளர்களுக்கு நல்லதொரு
சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
உள்நாட்டு உற்பத்திகளில் முதலீடு செய்யும் வெளிநாட்டு
தொழில் முயற்சியாளர்களுக்கு இலங்கை அதிக ஊக்குவிப்புகளை வழங்கிவருவதாகவும்
ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இந்து சமுத்திர ரிம் அமைப்பின் (இந்து சமுத்திர கரையோர
எல்லையைக் கொண்ட நாடுகள்) தலைமைத்துவத்தை இந்தோனேசியா
பெற்றுக்கொள்விருப்பதாகக் குறிப்பிட்ட இந்தோனேசிய ஜனாதிபதி, இந்து சமுத்திர
ரிம் அமைப்பின் நடவடிக்கைகளுக்கு இலங்கையின் கூட்டுறவு அவசியம் எனக்
குறிப்பிட்டார்.
இலங்கையிலிருந்து சிறந்த விலைக்கு இறப்பரை ஏற்றுமதி
செய்ய முடியும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி சிறிசேன, இது தொடர்பில் நாம் எமது
கூட்டுறவை விரிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இலங்கைக்கான இந்தோனேசியாவின் கருடா தேசிய விமான சேவையின்
விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பிலும் இதன்போது கவனம்
செலுத்தப்பட்டது.
இலங்கை ஏற்கெனவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய
நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையைச் செய்து கொண்டுள்ளதாகக்
குறிப்பிட்ட இலங்கையின் மூலோபாய அபிவிருத்தி, சர்வதேச வர்த்தகத் துறை
அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, நாம் எதிர்காலத்தில் இதேபோன்ற உடன்படிக்கையை
சீனா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடனும் செய்து கொள்ளவுள்ளோம் எனவும்
தெரிவித்தார்.
நன்றி ஜனாதிபதி செய்தி ஊடகம். |