கொஸ்கமவில் பாதிக்கப்பட்ட 51 வீடுகளின் திருத்தப் பணிகள் பூர்த்தி –
இராணுவம்
[2016/06/12]
அண்மையில் கொஸ்கம, சாலாவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு
காரணமாக பாதிக்கப்பட்ட பொது மக்களை அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு
வரும் வகையில் இராணுவத்தினர், இரவு பகலாக திருத்த வேலைகள் மற்றும்
மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு பாதிக்கப்பட்ட மக்களின் சுமார் 51 வீடுகளை
முழுமையாக புனரமைத்து அவர்களை மீண்டும் தங்களது வீட்டில் வாழ்வதற்கான
வழிவகைகளை செய்து கொடுத்துள்ளனர்.
இத்திருத்த மற்றும் மறுசீரமைப்பு பணிகளில் சேதமடைந்த
கூரைகள், ஓடுகள், கூரைத்தகடுகள், தகரங்கள் ஆகியன மீள பொருத்தப்பட்டதுடன்
பாதிக்கப்பட்ட சுவர்கள், தூண்கள், கூரைக்கட்டமைப்புக்கள், கதவுகள்,
ஜன்னல்கள், கழிப்பறைகள் மற்றும் சிறு சேதங்கள் ஆகியனவும் மறுசீரமைத்து
கொடுக்கப் பட்டன.
மேற்படி திருத்தப் பணிகள் மூலம் இலங்கை இராணுவ பொறியியல்
படைப்பிரிவானது கடந்த 5 நாட்களில் 51 வீடுகள் முழுமையாக
திருத்தியமைத்துள்ளதாக இராணுவ தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை (10) காலையளவில் சுமார் 40-43 க்கும்
மேற்பட்ட குடும்பங்கள், திருத்தியமைக்கப்பட்ட வீடுகளுக்கு மீள திரும்பி
அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளதுடன் இது தொடர்பாக அவர்களுக்கு
கிராமசேவை அதிகாரிகள் மூலம் முறையாக தெரிவிக்கப்பட்டும் உள்ளது.
மேலும் அனர்த்தத்துக்குள்ளான இப்பிரதேசத்தில் , அனர்த்த
முகாமைத்துவ மத்திய நிலையம், பிரதேச செயலாளர் மற்றும் படையினர் ஆகியோர்
இணைந்து பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
|