வரட்சியினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம்
பெற்றுக்கொடுப்பதற்கு முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு ஆலோசனை
வழங்கப்பட்டுள்ளது.
[2017/01/13]
வரட்சியினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம்
வழங்கும் பணிகளில் அரச உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக முப்படையினரின்
ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்வதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக
ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இன்று (13) முற்பகல் இலங்கை சீனக்குடா விமானப்படைக்
கல்லூரியில் நடைபெற்ற விமானப்படை பயிலுனர்களை அதிகாரம் பெற்றவர்களாக
நியமித்தல் மற்றும் விமானப்படை வீர்ர்கள் பயிற்சி நிறைவுசெய்து வெளியேறும்
நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு
தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள்,
நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் மக்கள் இன்னல்களை எதிர்நோக்கும்
சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குதல் தொடர்பாக
முப்படையினரின் பணிகள் அளப்பரியவை எனவும், முப்படைகளினதும் தலைவர் என்ற
வகையிலும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையிலும் படையினர் மீது தான் மிகுந்த
நம்பிக்கையை கொண்டுள்ளதாகவும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள்,
முப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ள வளங்களை மென்மேலும் அதிகரித்து நாளைய
உலகின் சவால்களை வெற்றிகொள்வதற்கு தேவையான இயந்திர மற்றும் தொழில்நுட்ப
அறிவை விருத்தி செய்து கொள்வதற்கான அனைத்து வசதிகளையும் குறைவின்றி
பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் என்ற வகையில் நடவடிக்கை எடுப்பதாகவும்
தெரிவித்தார்.
இன்று முற்பகல் திருகோணமலை சீனக்குடா விமானப்படைக்
கல்லூரிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள், விமானப் படைத்தளபதி எயார்
மார்ஷல் கபில ஜயம்பதி உள்ளிட்ட விமானப் படை அதிகாரிகளால் வரவேற்கப்பட்டதுடன்,
ஜனாதிபதி அவர்களுக்கு மரியாதை செலுத்தும் முகமாக படையினரின் மரியாதை
அணிவகுப்பொன்றும் இடம்பெற்றது.
“தாய்நாட்டை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளின் கீழ்
பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை விமானப் படையினரின் பெருமைமிகு செயற்பணிகளுக்கு
வலுச் சேர்ப்பதற்காக இலங்கை விமானப் படையின் உறுப்பினர்களாக இணைந்துகொள்ளும்
56ஆவது பயிலுனர் பாடநெறி மற்றும் 08ஆவது பெண்கள் பயிலுநர் பாடநெறி என்பவற்றை
பின்பற்றிய பயிலுநர் உத்தியோகத்தர்களை அதிகாரம் பெற்றவர்களாக நியமித்தல்,
84ஆவது பறக்கும் பயிலுநர் பாடநெறியை பின்பற்றிய உத்தியோகத்தர்களுக்கு பறப்பு
சின்னம் சூட்டுதல், 162ஆவது நிரந்தர விமானப்படை பயிலுநர் பாடநெறி மற்றும்
32ஆவது நிரந்தர பெண்கள் படையின் பயிலுநர் பாடநெறி என்பவற்றை வெற்றிகரமாக
பின்பற்றிய விமான படையினர் ஆகியோரின் பயிற்சி நிறைவு செய்து வெளியேறும்
நிகழ்வும் இவ்வாறு இடம்பெற்றது.
இப்பாடநெறிகளின்போது விசேட திறமைகளை காட்டிய பயிலுநர்
படையினர் மற்றும் விமானப்படை வீர, வீராங்கனைகளுக்கு விசேட விருதுகளும்
ஜனாதிபதி அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது நடைபெற்ற விமானப் படையினரின் சாகசக் கண்காட்சி,
மற்றும் பெரசூட் கண்காட்சி என்பவற்றினால் நிகழ்வு வண்ணமயமாகியது.
கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ, பாதுகாப்பு
செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, விமானப்படை தளபதி எயார் மாசல் கபில
ஜயம்பதி, சீனக்குடா விமானப்படைக் கல்லூரியின் பீடாதிபதி எயார் வைஸ் மார்ஷல்
பீ.டி.கே.டீ.ஜயசிங்க உள்ளிட்ட முப்படைகளின் அதிகாரிகளும் இந்நிகழ்வில்
பங்குபற்றினர்.
|