அதிகாரத்திற்காக அன்றி நாட்டைக் கட்டியெழுப்பவே அனைவரும் இன்று
ஒன்றிணைந்து போராடவேண்டியுள்ளது – ஜனாதிபதி
[2017/01/30]
அதிகாரத்திற்காக அன்றி நாட்டைக் கட்டியெழுப்பவே அனைவரும்
இன்று ஒன்றிணைந்து போராடவேண்டியுள்ளது என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால
சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
அதிகாரத்தைக் கோரி சிலர் போராட்டங்களை முன்னெடுத்த போதும்
2020 க்குப் பின்னர் நடைபெறும் தேர்தலில் மக்கள் தீர்ப்புக்கு அமையவே
அனைத்தும் அமையும் அதற்கு முன்னர் அரசியல் அதிகாரம் குறித்து எவருக்கும்
நினைத்துப்பார்க்கவும் முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தேர்தல் காலத்தில் அரசியல் நோக்கங்களுக்காக போராட்டங்களை
முன்னெடுத்த போதும் மக்கள் விருப்பத்தில் தெரிவான புதிய அரசாங்கம்
முன்னேற்றத் திட்டங்களுடன் நாட்டை முன்கொண்டு செல்கையில் குறுகிய அரசியல்
நோக்கங்களை மறந்து அந்தத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே நாட்டை
விரும்பும் அனைத்து அரசியல்வாதிகளினதும் பொறுப்பு என்று ஜனாதிபதி மேலும்
தெரிவித்தார்.
மொனராகலை கும்புக்கன் ஓயா நீர்த்தேக்கத் திட்ட
அங்குரார்ப்பண நிகழ்வில் இன்று (28) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே
ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஊவா வெல்லஸ்ஸவை மீண்டும் விவசாயத் துறையில் முன்னேற்றி
அந்த மக்களின் வாழ்க்கையை சுபீட்சமடையச் செய்வதற்காக 31,000 மில்லியன் ரூபா
செலவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
விவசாயத் துறைக்குத் தேவையான நீரை வழங்குவதுடன்
துரிதமாகப் பரவிவரும் சிறுநீரக நோயை ஒழித்துக்கட்டி மக்களுக்குத் தேவையான
சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மொனராகலை, புத்தல, சியாம்பளாண்டுவ பிரதேச மக்களுக்கு இதன்
மூலம் நன்மை கிடைப்பதுடன், தற்போதிருக்கும் 3100 ஏக்கர் விவசாயக் காணிகளை
அபிவிருத்திசெய்தல், புதிதாக 10315 ஏக்கர் விவசாயக் காணிகளை சாகுபடிசெய்தல்
மற்றும்; நீர் மின்சாரத்தை உற்பத்திசெய்யவும் இதன் மூலம்
எதிர்பார்க்கப்படுகிறது.
கும்புக்கன் ஓய நீர்த்தேக்கத் திட்டம் ஜனாதிபதி
அவர்களினால் இன்று முற்பகல் சுபவேளையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
விவசாய சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி நாட்டின் விவசாயத்துறையை
கட்டியெழுப்புவதற்குத் தேவையான நிகழ்ச்சித்திட்டங்களை அரசாங்கம்
நடைமுறைப்படுத்தியுள்ளதுடன், இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சிறிய மற்றும்
நடுத்தர குளங்களை புனரமைப்பதும் பல்வேறு புதிய நீர்ப்பாசனத் திட்டங்களை
ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி மேலும்
தெரிவித்தார்.
பாரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் உள்ளிட்ட அபிவிருத்தித்
திட்டங்கள் காரணமாக காணிகளை இழந்த மக்களை பொருளாதார ரீதியாக முன்னேறச்
செய்து அவர்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளை அரசாங்கம் முறையாக
மேற்கொண்டுவருகிறது. அது தொடர்பில் இதுவரை எவ்வித பிரச்சினையும்
உருவாகவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மொனராகலை மாவட்ட அபிவிருத்திக்குத் தேவையான அனைத்து
நிதிகளையும் வழங்கி மாவட்டத்தை அபிவிருத்திசெய்து மக்களின் பிரச்சினைகளை
தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அமைச்சர்களான விஜித் விஜயமுனி சொய்சா, ரஞ்சித் மத்தும
பண்டார, பிரதி அமைச்சர் சுமேதா பீ ஜயசிங்க, ஊவா மாகாண விசேட கருத்திட்ட
பணிப்பாளர் ஜகத் புஷ்பகுமார, ஊவா மாகாண ஆளுநர் எம்.பீ ஜயசிங்க ஆகியோரும்
இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நன்றி : ஜனாதிபதி செய்தி ஊடகம்
|