இன்று ஆரம்பமாகும் இலங்கை தென் கொரிய உறவின் கீர்த்திமிக்க அத்தியாயம்
இரு நாடுகளுக்கும் பல்வேறு நன்மைகளை கொண்டு வரும் – தென்கொரிய ஜனாதிபதி
[2017/11/29]
தென் கொரியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான இராஜதந்திர
உறவுகளுக்கு 40 வருடங்கள் நிறைவுபெறும் இச்சந்தர்ப்பத்தில் இடம்பெறும்
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தென்கொரிய விஜயம் இரு
நாடுகளுக்கிடையேயும் பலமான உறவை ஏற்படுத்துவதற்கு அடித்தளமாக அமையுமென
தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜெயிங் அவர்கள் தெரிவித்தார்.
இன்று ஆரம்பமாகும் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவின்
கீர்த்திமிக்க அத்தியாயம் இரு நாடுகளுக்கும் பல்வேறு நன்மைகளைக் கொண்டுவரும்
என்றும் தென்கொரிய ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
தென் கொரியாவுக்கான அரச முறைப் பயணத்தை
மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் தென்
கொரிய ஜனாதிபதி மூன் ஜெயிங் அவர்களுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு
இன்று (29) முற்பகல் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போதே தென் கொரிய ஜனாதிபதி
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்று முற்பகல் சியோல் நகரில் உள்ள தென்கொரிய
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான புலூ ஹவுஸ் இல்லத்திற்கு சென்ற இலங்கை
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜெயிங்
மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் இடம்பெற்ற இந்த வரவேற்பு
நிகழ்வுக்கு ஜனாதிபதி அவர்கள் வருகை தந்த வீதியின் இரு புறத்திலும் இரு
நாடுகளினதும் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தது. இரு
தலைவர்களுக்குமிடையிலான சுமூகமான கலந்துரையாடலை தொடர்ந்து இருதரப்பு
பேச்சுவார்த்தை ஆரம்பமானது.
இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை புதிய
பிரவேசத்துடன் பலப்படுத்துவது குறித்து இதன்போது இரு நாட்டுத் தலைவர்களும்
விரிவாக கலந்துரையாடியதுடன், சம அனுபவங்களைக்கொண்ட இரு நாடுகள் என்ற வகையில்
இவ் உறவுகளை அனைத்து துறைகளிலும் பலப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் உள்ளதென்று
தென் கொரிய ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஹோமாகம டெக் சிட்டி (Tech City) மற்றும் கட்டுநாயக்க
எரோசிட்டி நிறுவனங்களை தாபிப்பதற்கான தொழில்நுட்ப உதவியை வழங்குமாறு
ஜனாதிபதி அவர்கள் தென் கொரிய ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டதுடன், அதற்கு தென்
கொரிய ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார்.
அரச தலைவர்களின் சந்திப்பைத் தொடர்ந்து இரு
நாடுகளுக்கிடையிலான கூட்டுறவை மேம்படுத்தும் ஐந்து ஒப்பந்தங்கள்
கைச்சாத்திடப்பட்டன.
இரு நாடுகளுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட பொருளாதார
கூட்டுறவு தொடர்பான உடன்படிக்கையில் தென் கொரிய பொருளாதாரத்துறை அமைச்சரும்
அமைச்சர் மலிக் சமரவிக்ரமவும் கைச்சாத்திட்டனர்.
தொழில் அனுமதிப்பத்திர முறைமை தொடர்பான ஒப்பந்தத்தில்
அமைச்சர் தலதா அத்துக்கோரலவும் அந்நாட்டின் தொழில் அமைச்சரும்
கைச்சாத்திட்டனர்.
2017 – 2019ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஒத்துழைப்பு
நிதியத்தின் மூலம் வழங்கப்படக்கூடிய கடன் தொடர்பான ஒப்பந்தமும் இதன்போது
கைச்சாத்திடப்பட்டது. இதில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவும் தென்
கொரிய வெளிவிவகார அமைச்சரும் கைச்சாத்திட்டனர்.
முதலீட்டு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு
உடன்படிக்கை இலங்கை முதலீட்டு அபிவிருத்திச் சபை மற்றும் தென் கொரிய
வர்த்தக முதலீட்டு அபிவிருத்தி நிறுவனத்திற்குமிடையில் கைச்சாத்திடப்பட்டது.
முதலீட்டு அபிவிருத்தி சபையின் தலைவர் துமிந்த ரத்னாயக்க மற்றும் கொரிய
நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் இவ் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
இரு நாடுகளுக்கிடையிலான கலை, கலாசாரத்துறை, கல்வி, இளைஞர்
விளையாட்டுத்துறை தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையும் வெளிவிவகார
அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் தென் கொரிய வெளிவிவகார அமைச்சர்
ஆகயோருக்கடையில் கைச்சாத்திடப்பட்டது.
இரு நாடுகளுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட தொழில்
அனுமதிப்பத்திர முறைமைக்கான ஒப்பந்தம் எதிர்காலத்தில் தென் கொரியாவில்
தொழில் செய்யும் இலங்கையர்களுக்கு மிகவும் பெறுமதியானதாக இருக்கமென
குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இலங்கை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தொழில்
அளவை அதிகரிக்குமாறு தென் கொரிய ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.
மீன்பிடி, நிர்மாணப்பணி ஆகிய துறைகளில் இலங்கை
ஊழியர்களுக்கு கொரியாவில் உள்ள தொழில்வாய்ப்புக்கள் எதிர்காலத்தில் விவசாய
மற்றும் பண்ணை வளர்ப்புத்துறையிலும் அதிகரிக்கப்படும் என தென் கொரிய
ஜனாதிபதி தெரிவித்தார்.
நன்றி: ஜனாதிபதி செய்தி ஊடகம் |