››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்படுத்தக்கூடிய முறையொன்று அவசியமாகும் – ஜனாதிபதி

சமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்படுத்தக்கூடிய முறையொன்று அவசியமாகும் – ஜனாதிபதி

[2018/03/14]

கண்டி மற்றும் அம்பாறை சம்பவங்களின் பின்னர் விதிக்கப்பட்ட பேஸ்புக் சமூக வலையமைப்பிற்கான தற்காலிகமான தடை எதிர்வரும் சில தினங்களுக்குள் நீக்கப்படும் எனவும், சமூக நலனுக்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு விடயத்திற்கும் இடமளிக்கப்பட்டபோதிலும், சமூகத்தை சீர்குலைக்கும் விடயங்கள் காணப்படுமாயின் அவற்றை கட்டுப்படுத்தக்கூடிய முறையொன்று அவசியமாகும் எனவும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

ஜப்பானிற்கான அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும், ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (13) பிற்பகல் டோக்கியோ இம்பேரியல் ஹோட்டலில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.

கையடக்கத் தொலைபேசி, கணனி, இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் என்பன மனித சமுதாயத்தின் நன்மை கருதியே உருவாகின. அவற்றினூடாக உலக அறிவினை பெற்றுக்கொள்ள முடியுமாயினும், துரதிஷ்டவசமாக சிலர் இந்த வளங்களை நாட்டை சீரழிப்பதற்காகவே உபயோகிக்கின்றனர் என இதன்போது ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

ஆகையினால் இந்த வளங்களை உரிய முறையில் உபயோகிப்பதற்கான புதிய செயற்திட்டமொன்றினை எதிர்வரும் சில வாரங்களுக்குள் நாட்டில் அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இதன்பொருட்டு அரசாங்கமும், நாட்டு மக்களும் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக் காட்டினார்.

தேசிய ஒற்றுமையை இல்லாது செய்தல், தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்துதல், தனிப்பட்ட நபர்களின் தன்மானத்திற்கு ஊறு விளைவித்தல் போன்றவற்றை இல்லாதுசெய்து சிறந்த ஆரோக்கியமான கருத்துக்களை மாத்திரம் பரிமாறிக்கொள்ளுதல் அவசியமாகும் எனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

அலுவலர்கள், வர்த்தகர்கள், மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொழில்புரிபவர்கள் இந்த சந்திப்பில் பங்குபற்றியதுடன், அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு ஜனாதிபதி அவர்களை வரவேற்றனர்.

ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்கள் தாய்நாட்டின் கீர்த்தியை பாதுகாத்து நாட்டிற்காக நிறைவேற்றும் செயற்பணிகளையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது பாராட்டினார்.

தமது துறைகளில் பணியாற்றும்போது தாம் எதிர்நோக்கும் சில பிரச்சினைகளை இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்ததுடன், அவற்றை தீர்த்து வைப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி அவர்கள் உறுதியளித்தார்.

இதற்கு முன்னர் ஜனாதிபதி அவர்களை சந்தித்த வேளையில் தம்மால் முன்வைக்கப்பட்ட சில பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி அவர்கள் தீர்வுகளை பெற்றுக்கொடுத்தமைக்கும் ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்கள் ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, திலக் மாரப்பன, மலிக் சமரவிக்கிரம, பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷு மாரசிங்ஹ உள்ளிட்ட குழுவினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

நன்றி_ஜனாதிபதி செய்தி ஊடகம்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்