அண்மைய நிலைமை குறித்த புதிய தகவல்கள்
[2018/05/25]
அனர்த்த முகாமைத்துவ மத்திய
நிலையம் வெளியிட்டுள்ள அண்மைய தகவல்களின் பிரகாரம் இன்றையதினம் (மே,25)
மதியம் 12 மணி வரையிலான காலப்பகுதியில் குறைந்தது 16 பேர்
உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் காணமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள மழையுடன் கூடிய
காலநிலை காரணமாக 35,129 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 138,200 க்கும்
அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பாதிக்கப்பட்ட 13,199
குடும்பங்கள் 10 மாவட்டங்களில் 231 நலன்புரி மையங்களில்
தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் நிலவுகின்ற சீரற்ற
காலநிலை காரணமாக அபாய நிலையை எதிர்கொண்டுள்ள கடுவெல - பியகம நகரங்களை
இணைக்கும் பிரதான பாலம் திருத்தி அமைக்கப்பட்டு போக்குவரத்திற்காக
திறந்துவிடப்பட்டுள்ளது.
தப்போவ மற்றும் ராஜாங்கனை
ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டங்கள் அதிகரித்துள்ளதாகவும் இதனால் அதன் வான்
கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
தெரிவித்துள்ளது.
இதுவரை 64 வீடுகள்
முழுமையாக சேதமடைந்துள்ள அதேவேளை 3840 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களை
மீட்கும் பணிகளில் பாதுகாப்புப் படைகளின் குழுக்கள் தொடர்ந்தும் ஈடுபட்டு
வருகின்றன. இம் மீட்பு மற்றும் நிவாரண குழுக்கள் கடுமையான
சூழ்நிலைகளின்போதும் சிறப்பாக செயற்பட்டு பல உயிர்களை
காப்பாற்றியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. |