முப்படை அதிகாரிகள் மாநாட்டின்
அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்
[2018/11/27]
அறிவு, தெளிவு மற்றும்
அனுபவங்களுடன் முழுமையான மனிதனாக நாட்டுக்கு சேவை செய்யக்கூடிய வாழ்க்கையின்
சிறந்த பருவத்தில் முப்படை உறுப்பினர் ஒருவர் ஓய்வு பெறுவது பற்றிய
பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்றும் முப்படையிலிருந்தே முன்
வைக்கப்படக் கூடிய முன்மொழிவுகளின் மூலம் அதற்கு பொருத்தமான தீர்வை
பெற்றுக்கொடுப்பதற்கு முப்படைத் தளபதி என்ற வகையில் தான் தயாராக உள்ளதாக
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
இன்று (26) முற்பகல்
அத்திடிய ரீகல் லேக்சைட்டில் நடைபெற்ற முப்படை அதிகாரிகள் மாநாட்டின்
அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள்
இதனைத் தெரிவித்தார்.
ஓய்வு பெற்றதன் பின்னரான
தமது செயற்பாடுகள் என்ன என்பது தொடர்பில் முப்படை உறுப்பினர்கள் இன்று
பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள்,
அவர்களின் இத்தகைய பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் தலையீடு மிகவும்
அவசியமானதாகும் என்றும் குறிப்பிட்டார்.
அறிவை பகிர்ந்து கொள்ளுதல்,
பிரச்சினைகளை புரிந்துகொள்ளுதல், சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கான பலம்.
சேவையின்போதும் தனிப்பட்ட வாழ்க்கையின்போதும் மிகவும் முக்கியமானதென
ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி என்ற வகையிலும்
படைத்தளபதி என்ற வகையிலும் முப்படையினர் மீது அதிக கௌரவமும் நம்பிக்கையும்
இருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், தேசிய பாதுகாப்பிலும்
அபிவிருத்தியிலும் மக்கள் நலன்பேணல் நடவடிக்கைகளிலும் முப்படையினர் வழங்கும்
குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை பாராட்டினார்.
“சவால்களுக்கு மத்தியில்
முப்படை அதிகாரிகளின் தொழில்சார் பொறுப்பு” என்ற கருப்பொருளின் கீழ் இந்த
மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நவீன தொழிநுட்பத்துடன் தொழில்
திறன்களுடன்கூடிய அதிகாரிகளாக, நிறுவனத்தின் அபிவிருத்திக்காக தலைமைத்துவ
பண்புகளுடன் செயற்படுவதன் மூலம் சிறந்த இராணுவமாக செயற்படுவதற்கு தேவையான
பின்புலத்தை கட்டியெழுப்பி, அவர்களது அறிவை விருத்தி செய்வதுடன்
அவர்களுக்கிடையேயான தொடர்புகளை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை
ஏற்படுத்திக்கொடுப்பது இந்த மாநாட்டின் நோக்கமாகும். இலங்கை இராணுவத்தினால்
இவ்வருடம் முதற் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாட்டை
எதிர்காலத்தில் ஒவ்வொரு வருடமும் நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
பாதுகாப்பு அமைச்சின்
செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி, முப்படை
தளபதிகள், முப்படைகளையும் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில்
கலந்துகொண்டனர்.
நன்றி:pmdnews.lk |