விமானப்படை வீரர்களின் வெளியேறல் நிகழ்வில்
பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு
[2019/01/12]
திருகோணமலை சீனக்குடா
விமானப்படை கலாபீடத்தில் வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர், 07) இடம்பெற்ற
விமானப்படை வீரர்களின் வெளியேறல் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் திரு.
ஹேமசிறி பெர்னாண்டோ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வுக்கு
வருகை தந்த செயலாளர் அவர்களை, இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில
ஜயம்பதி அவர்கள் வரவேற்றார்.
மிகவும் கோலாகலமாக
இடம்பெற்ற பயிலுனர் அதிகாரிகளின் வெளியேறிச் செல்லும் மரியாதை அணிவகுப்பு
நிகழ்வில் இலங்கை விமானப்படையின் 58வது ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 34
பயிலுனர் (கெடட்) அதிகாரிகள் மற்றும் 10வது பெண்கள் பயிலுனர் (லேடி கெடட்)
ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 10 பயிலுனர் அதிகாரிகள் அதிகாரம்
அளிக்கப்பட்டதுடன் இல.167வது நிரந்தர எயாமென் பயிற்சிநெறி, இல.37 வது
நிரந்தர எயாவுமென் பயிற்சிநெறி, இல.130 வது தொண்டர் எயாமென் பயிற்சிநெறி,
13 வது தொண்டர் எயாவுமென் பாடநெறி, 35 வது நேரடி ஆட் சேர்ப்புக்கு சொந்தமான
எயாமென் மற்றும் எயாவுமென் ஆகியோர் தமது பயிற்சிநெறியினை பூர்த்தி செய்த
விமானப்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு உரை நிகழ்த்திய
பாதுகாப்பு செயலாளர் அவர்கள், முப்படையினரின் சேவைகளை பாராட்டியதுடன்,
அவர்கள் உலகில் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் அல்ல எனவும்
குறிப்பிட்டார். இன்று வெளியேறுகின்ற அதிகாரிகளும் ஏனைய படை வீரர்களும்
நாட்டிற்கு ஒரு விலைமதிப்பற்ற சேவையை வழங்கவதற்காக தத்தமது அணிகளில்
இன்றையதினம் முதல் இணைந்து கொள்கின்றனர் என ஞாபகமூட்டினார்.
ஏனைய நபர்களின் வெளியேறல்
நிகழ்வு போலன்றி அதிகாரிகள் வெளியேறல் நிகழ்வானது, அவர்கள் பதவிநிலைகளுடன்
இணைந்து தேசத்திற்கு விலைமதிப்பற்ற ஒரு சேவையை வழங்கும் வகையிலானது என்பதை
அவர் நினைவுபடுத்தினார்.
மேலும் அவர் தனதுரையில்,
நாம் நாட்டில் புரையோடிக் காணப்பட்ட பயங்கரவாதத்தை தோற்கடித்து நல்லிணக்கம்
மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்ப அமைதி மற்றும் அபிவிருத்தியின்
சகாப்தத்தில் நுழைந்துள்ளோம். நாட்டினை முன்னேற்றப்பாதையில் கொண்டு
செல்வதற்கும், நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காகவும்
அர்ப்பணிப்புடன் மற்றும் ஒழுக்கத்துடனும் கடமையாற்ற வேண்டும் என வேண்டுகோள்
விடுத்த செயலாளர் இம்மகத்தான சேவைக்கு தங்கள் பிள்ளைகளை மனமுவந்து வழங்கிய
பெற்றோர்களுக்கும் நன்றியினை தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, பயிலுனர்
அதிகாரிகளுக்கு அதிகாரமளிக்கும் நிகழ்வினைத் தொடர்ந்து விமானப்படையின்
விமானிகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் ஆகியோரினால் PT6 ரக விமான சாகசம்
ஒன்று நிகழ்த்தப்பட்டது. அத்துடன் பேண்ட் வாத்திய காட்சி, பயிற்சி காட்சிகள்,
பரசூட் காட்சிகள் மற்றும் மாதிரி இராணுவ தாக்குதல் போர் பயிற்சி காட்சிகள்
என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் சமய தலைவர்கள்,
சிரேஷ்ட விமானப்படை அதிகாரிகள், அதிதிகள், அரச அதிகாரிகள், விமானப்படை வீர
வீராங்கனைகளின்பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர்
கலந்துகொண்டனர்.
|