இராணுவ வெற்றியின் பத்து வருட பூர்த்தியை
முன்னிட்டு இராணுவ நினைவு வருடம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
[2019/03/06]
எல்ரீரீஈ
பயங்கரவாதத்திலிருந்து எமது தாய்நாடு விடுவிக்கப்பட்ட இராணுவ வெற்றியின்
பத்து வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு இராணுவ நினைவு வருடத்தினை
பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைய நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஆட்புல எல்லை
மற்றும் இறைமையை பாதுகாப்பதற்காக உயிர்நீத்த, காணாமற்போன மற்றும்
அங்கவீனமுற்ற இராணுவத்தினருக்கு தேசத்தின் கௌரவத்தினை செலுத்துவதற்கும்
நினைவுகூருவதற்கும் ஒவ்வொரு வருடமும் இராணுவ நினைவு மாதம்
பிரகடனப்படுத்தப்பட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு
வருகின்றன.
இராணுவ வெற்றிக்கு பத்து
வருடங்கள் பூர்த்தியடையும் இந்த 2019ஆம் ஆண்டில் இராணுவ நினைவு வருடத்தினை
பிரகடனப்படுத்தி பரந்தளவிலான வேலைத்திட்டங்களை நாடளாவிய ரீதியில்
நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலில் ரணவிரு சேவா
அதிகார சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இராணுவ நினைவு வருடத்தினை
பிரகடனப்படுத்தி அதனுடன் இணைந்ததாக முன்னெடுக்கப்பட்டுள்ள இராணுவ கொடி
இயக்கத்தின் முதலாவது கொடி ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் ஜம்மிக்க
லியனகேவினால் இன்று (05) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி
கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டிற்கான இராணுவ
கொடி வருமானம் மாகாண ஆளுநர்களினால் இதன்போது உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி
அவர்களிடம் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி அவர்கள் அதனை ரணவிரு சேவா அதிகார
சபையின் தலைவரிடம் கையளித்தார்.
அதனைத் தொடர்ந்து 2019ஆம்
ஆண்டிற்கான இராணுவ கொடிகளை ஜனாதிபதி அவர்கள் மாகாண ஆளுநர்களிடம் கையளித்தார்.
இராஜாங்க அமைச்சர் ருவன்
விஜேவர்தன, விஜேயதாச ராஜபக்ஷ, மகிந்த அமரவீர உள்ளிட்ட பாராளுமன்ற
உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள். மாகாண முதன்மை செயலாளர்கள், முப்படை
தளபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை பிரதானிகள் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.
நன்றி: pmdnews.lk |