‘விருசர வரப்பிரசாத அட்டை’ வழங்கும் 2ம் கட்டம் : ஜனாதிபதி தலைமையில்
[2016/06/22]
இராணுவத்தினர் மற்றும் அவர்களின்
பராமரிப்பிலுள்ளவர்களுக்கு வழங்கப்படும் விசேட வரப்பிரசாதங்கள் அடங்கிய 'விருசர
வரப்பிரசாத' அட்டைகள் வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு இம்மாதம்
27ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில்
பொலன்னறுவையில் நடைபெறவுள்ளது.
மேற்படி நிகழ்வினை ஹிங்குராக்கொட ரஜரட்ட வித்தியலயத்தில்
நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நேற்றைய தினம்
(ஜுன்,21) கொழும்பு ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில்
தெரிவிக்கப்பட்டது.
‘விருசர வரப்பிரசாத அட்டை’ வழங்கும் செயற்றிட்டம் 2015
ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன்
விஜேவர்தன அவர்களினால் தாய் நாட்டிற்காக பல்வேறு தியாகங்களை புரிந்த
படையினரை கௌரவப்படுத்தும் திட்டங்களில் ஒரு அங்கமாக ஆரம்பித்து
வைக்கப்பட்டது. இவ்வேலைத்திட்டத்தின் பிரதான நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில்
2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றமை
குறிப்பிடத்தக்கது.
இத் திட்டத்தின் முதலாம் கட்டத்தில் தாய் நாட்டிற்காக
உயிர் தியாகம் செய்த படை வீரர்களின் குடும்பங்கள் மற்றும் அங்கவீனமுற்ற படை
வீரர்கள் ஆகியோருக்கு சுமார் 15000 'விருசர வரப்பிரசாத அட்டைகள்’ வழங்கி
வைக்கப்பட்டன. இதன் இரண்டாம் கட்ட நிகழ்வின்போது யுத்த இடம்பெற்ற
பிரதேசங்களில் 1983 தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில்
சேவையாற்றி இராணுவத்திலிருந்து ஒய்வு பெற்ற இராணுவ வீரர்கள் மற்றும்
அப்பிரதேசங்களில் கடமை புரிந்த சிவில் தொழிலாளர்கள் ஆகியோருக்கு
வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் “சுது பரவியந்த முல் தன தென்ன’’ - தாய்
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த மற்றும் அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கு
முன்னுரிமை அளிப்போம் எனும் தொனிப்பொருளை கொண்டமைந்ததாக ‘விருசர வரப்பிரசாத
அட்டை’ வழங்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
மேற்படி, செய்தியாளர் மாநாட்டின் போது பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு.ஏபீஜீ. கீத்சிறி, பாதுகாப்பு அமைச்சின்
சேவா வனிதா பிரிவின் தலைவி மற்றும் பாதுகபாப்பு அமைச்சின் சிரேஷ்ட
அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
“‘விருசர” தொடர்பான செய்திகள் >>
|